பழனிசாமி மறதிநோய்க்கு சிகிச்சை எடுக்கலாம்: பன்னீர்செல்வம்
பழனிசாமி மறதிநோய்க்கு சிகிச்சை எடுக்கலாம்: பன்னீர்செல்வம்
ADDED : ஜூன் 17, 2025 11:41 PM
சென்னை:'தனது ஆட்சியில் நடந்த குற்ற சம்பவங்களை மறந்துவிட்டு, தி.மு.க., ஆட்சியில் நடக்கும் குற்றங்களை மட்டுமே, பூதாகரமாக பேசுவதை பார்த்தால், பழனிசாமி மறதி நோய்க்கு சிகிச்சை பெறுவது நல்லது' என வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
பழனிசாமி ஆட்சியில், பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நிகழ்ந்தால், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தையே தாக்கி மிரட்டும் சூழல் நிலவியது.
தற்போது பெண்களுக்கு எதிராக, எவர் குற்ற செயலில் ஈடுபட்டாலும், விரைந்து நடவடிக்கை எடுத்து, கைது செய்யப்படுகின்றனர். வழக்கு விசாரணையை விரைந்து முடித்து, உச்சபட்ச தண்டனையும் பெற்று கொடுக்கப்படுகிறது. பழனிசாமி ஆட்சியிலும், மூதாட்டிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
தனது ஆட்சியில் நடந்த, குற்ற சம்பவங்களை மறந்துவிட்டு, தி.மு.க., ஆட்சியில் நடக்கும் குற்றங்களை மட்டுமே, பூதாகரமாக பேசுவதை பார்த்தால், பழனிசாமி மறதி நோய்க்கு சிகிச்சைப் பெறுவது நல்லது.
எங்காவது அசம்பாவிதம் நடந்து விடாதா. அதை வைத்து அரசியல் செய்ய முடியாதா என நாள்தோறும் பழனிசாமி அலைகிறார். உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும், உள்நோக்கத்தோடு அதை வைத்து அரசியல் செய்கிறார்.
பழனிசாமியின் அரசியல், மறைமுகமாக, தமிழக பெண்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது. பெண்களுக்கு பயத்தை உண்டாக்கி, அவர்களை வீட்டுக்குள்ளேயே முடக்கும், பா.ஜ.,வின் கொள்கையை, பழனிசாமி வழிமொழிவது வெட்கக்கேடானது. தனது கூட்டணிக்குள் நடக்கும் குஸ்தியையும், பா.ஜ.,வின் ஆட்சி அதிகார மிரட்டல்களையும், சமாளிக்க முடியாமல் திணறும் பழனிசாமி, அதை மடைமாற்ற, தி.மு.க., அரசு மீது வீண் அவதுாறுகளை கொட்டி, என்னதான் கலர் கலராய் ரீல் விட்டாலும், அது எதுவுமே மக்கள் மத்தியில் எடுபடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

