ADDED : அக் 30, 2025 01:36 AM
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்து வெளியிட்டு உளள அவரது அறிக்கை:
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் புதிய ஊழியர்களை நியமிக்க நடந்த தேர்வில், முறைகேடுகள் நடந்துள்ளதாகவும்; 800 கோடி ரூபாய்க்கு மேல் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த ஊழலில், தி.மு.க., அரசின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மற்றும் அவரது சகோதரர்களின் நிறுவனங்கள், அதிகாரிகள் இணைந்து, வேலை வாய்ப்புக்காக முயற்சித்தவர்களிடம், 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வசூலித்துள்ளனர்.
தமிழக காவல் துறை பொறுப்பு டி.ஜி.பி., இந்த ஊழலில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்காமல், நடுநிலையோடு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப்பணி என்பது பல்வேறு இளைஞர்களின் கனவு. அந்த கனவை நனவாக்க, இரவு, பகல் பாராமல் போராடிக் கொண்டிருக்கும் அவர்களின் உழைப்பை, தங்களின் கமிஷன் கொள்ளைக்காக சிதைக்கும், தி.மு.க., அரசுக்கு ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

