'டிவி'யில் காட்டாதது ஜனநாயக படுகொலை பழனிசாமி கண்டனம்
'டிவி'யில் காட்டாதது ஜனநாயக படுகொலை பழனிசாமி கண்டனம்
ADDED : ஜன 09, 2025 07:16 PM
சென்னை:''மக்கள் நலனுக்கான எதிர்க்கட்சியின் கேள்விகளை, மக்கள் பார்த்து விடக்கூடாது என எத்தனிப்பது என்பது ஒரு ஜனநாயக படுகொலை தான்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்தனர். இதை தொலைக்காட்சி நேரலையில் காட்டவில்லை.
இதற்கு கண்டனம் தெரிவித்து, பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆளும் கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்து விட்டதா சட்டசபை? சபையின் கேமராக்கள், எதிர்க்கட்சியின் பக்கம் திரும்பவே இல்லை. எதிர்க்கட்சி வரிசை, உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா ஸ்டாலின்; எதற்காக இவ்வளவு அஞ்சி நடுங்குகிறீர்கள்?
'யார் அந்த சார்' என்ற நீதிக்கான கேள்வி, உங்களை அவ்வளவு உறுத்துகிறது என்றால், மீண்டும் கேட்கிறேன். யாரை காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் அரசு?
மக்கள் நலனுக்கான எதிர்க்கட்சியின் கேள்விகளை, மக்கள் பார்த்து விடக்கூடாது என, ஸ்டாலின் அரசு எத்தனிப்பது என்பது ஒரு ஜனநாயகப் படுகொலை தான்.
தமிழக சட்டசபை நிகழ்வுகளை, எந்தவித ஒளிவு மறைவுமின்றி முழுமையாக, மக்களின் குரலான எதிர்க்கட்சியின் கருத்துக்களை, மக்களுக்கு நேரடி ஒளிபரபபு செய்ய வேண்டும்.
தமிழக சட்டசபை, பொதுமக்களின் தேவையை சபையேற்றி, சட்டமியற்றி, திட்டமியற்றி செயல்படும் தமிழக மக்களின் மேடை; தி.மு.க.,வின் பொதுக்கூட்ட மேடையல்ல. இதை புரிந்து கொண்டு தி.மு.க., அரசு நடந்து கொள்வது நல்லது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.