பா.ஜ.,வின் ஒரிஜினல் வாய்ஸாக பழனிசாமி மாறிவிட்டார்: ஸ்டாலின்
பா.ஜ.,வின் ஒரிஜினல் வாய்ஸாக பழனிசாமி மாறிவிட்டார்: ஸ்டாலின்
UPDATED : ஜூலை 11, 2025 05:58 AM
ADDED : ஜூலை 11, 2025 02:06 AM

திருவாரூர்: ''எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, பா.ஜ.,வின் ஒரிஜினல் வாய்ஸாக மாறி விட்டார்,'' என, முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
திருவாரூரில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன்; தமிழகத்தின் வரலாற்றில் எந்த அரசும், இவ்வளவு திட்டங்களை செய்திருக்காது.
நிதி நெருக்கடிக்கு மத்தியில், ஒன்றிய அரசையும் சமாளித்து சாதனைகளை செய்திருக்கிறோம்; தொடர்ந்து செய்யத்தான் போகிறோம். இதை பார்த்து, தாங்க முடியாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, 'தமிழகத்தை மீட்போம்' என, ஒரு பயணத்தை துவக்கியுள்ளார்.
தமிழ்நாடு என சொல்லக்கூடாது என்று சொல்லுகிற கூட்டத்துடன், அ.தி.மு.க.,வை சேர்த்துவிட்டார். அ.தி.மு.க.,வை மீட்க முடியாதவர், தமிழகத்தை மீட்கப் போகிறாராம்.
கூவத்துாரில் ஏலம் எடுத்து, கரப்ஷன், கலெக் ஷன், கமிஷன் என தமிழகமே பார்க்காத அவல ஆட்சி நடத்தியவர் பழனிசாமி.
பழனிசாமிக்கு தெரிந்தது எல்லாம், துரோகம் செய்வது மட்டும் தான். உங்களை கொண்டு வந்தவருக்கு துரோகம் செய்து, வெளியில் அனுப்பினீர்கள். கட்சிக்கும், தொண்டர்களுக்கும் துரோகம் செய்து கூட்டணி வைத்தீர்கள்.
ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தை அடகு வைத்து, மக்களுக்கு துரோகம் செய்தீர்கள். இப்போது, தமிழகத்தின் உரிமைகளை பறித்தவர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் பள்ளி, கல்லுாரி கட்டக்கூடாது என்கிறார்; இதற்கு முன், பா.ஜ.,வுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து கொண்டிருந்த பழனிசாமி, தற்போது பா.ஜ.,வின் ஒரிஜினல் வாய்ஸாக பேச ஆரம்பித்து விட்டார்.
அறநிலையத்துறை சட்டத்தில் கல்லுாரி துவங்க அனுமதி இருக்கிறது. இது தெரியாமல் எப்படி முதல்வராக இருந்தார் என தெரியவில்லை.
எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, பழனி ஆண்டவர் தொழில்நுட்ப கல்லுாரி திறந்திருக்கிறார். அந்த கல்லுாரிக்கு, கூடுதல் கட்டடத்தை திறந்ததே பழனிசாமிதான். நாங்கள் கல்லுாரி துவங்கினால் தவறு என்கிறார். பா.ஜ.,வினர் கூட இப்படி சொல்வதில்லை.
என்ன பயணம் போனாலும், இறுதியில் இலக்கை அடைய மாட்டார் பழனிசாமி.
இவ்வாறு அவர் பேசினார்.