அண்டை மாநில முதல்வர்களுடனான நெருக்கத்தை பயன்படுத்தி, நதிநீர் பிரச்னைக்கு தீர்வு
அண்டை மாநில முதல்வர்களுடனான நெருக்கத்தை பயன்படுத்தி, நதிநீர் பிரச்னைக்கு தீர்வு
ADDED : மார் 25, 2025 03:22 AM

சென்னை : ''அண்டை மாநில முதல்வர்களுடனான நெருக்கத்தை பயன்படுத்தி, நதிநீர் பிரச்னைக்கு முதல்வர் ஸ்டாலின் தீர்வு காண வேண்டும்,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார்: தென் மாநில முதல்வர்கள், இப்போது தமிழக அரசோடு இணக்கமாக உள்ளனர். இதைப் பயன்படுத்தி, நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: அண்டை மாநில முதல்வர்களுடன், முதல்வர் ஸ்டாலின் நெருக்கமாக இருக்கிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தான் உதயகுமார் கூறுகிறார்.
சபாநாயகர் அப்பாவு: சுதந்திரம் அடைந்த பின், இத்தனை ஆண்டுகளில், அண்டை மாநில முதல்வர்கள் எந்த மாநிலத்தோடும் பெரிய தகராறு செய்ததில்லை; செய்யவும் மாட்டார்கள். ஏனெனில், நம் மக்கள் அந்த மாநிலங்களிலும், அம்மாநில மக்கள் இங்கும் வசிக்கின்றனர்.
பழனிசாமி: கர்நாடகா, கேரளம், ஆந்திராவில் இருந்து தான் தமிழகம் தண்ணீர் பெறுகிறது. இம்மாநிலங்கள் உடனான நதிநீர் பிரச்னை, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இப்போது, அந்த மாநில முதல்வர்களுடன், முதல்வர் ஸ்டாலின் நெருக்கமாக உள்ளார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து, தமிழகத்திற்கான தண்ணீரை பெற வேண்டும். இதில் அரசியல் எதுவும் இல்லை. மக்கள் நலனுக்காகவே கேட்கிறோம்.
அமைச்சர் துரைமுருகன்: அண்டை மாநில முதல்வர்களுடன், இன்றைய முதல்வர் ஸ்டாலின் நெருக்கமாக இருப்பதாக பழனிசாமி கூறுகிறார். பழனிசாமி முதல்வராக இருந்தபோது, அண்டை மாநில முதல்வர்கள், விரோதியாக சண்டை போட்டனரா?
பழனிசாமி: நான் முதல்வராக இருந்த போது, கேரளம் சென்று, அம்மாநில முதல்வருடன் பேச்சு நடத்தினேன். மக்களின் பிரச்னையை தீர்க்க, உங்களுக்கு இருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.