மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்
ADDED : ஜன 28, 2025 07:28 PM
சென்னை:'தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண, தி.மு.க., கூட்டணியின் 39 எம்.பி.,க்களும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த 25ம் தேதி வங்க கடலில், மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், 33 பேரை, இலங்கை கடற்படை கைது செய்ததுடன், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதும், படகுகளை பறிமுதல் செய்வதும், சேதப்படுத்துவதும் அதிகரித்துள்ளது. மீனவர்கள் கைது செய்யப்பட்டவுடன், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தன் வேலை முடிந்து விட்டதாக கருதி, அடுத்த வேலையை பார்க்க, தி.மு.க., அரசு போய் விடுவதாக, மீனவர் குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதையும், படகுகளை பறிமுதல் செய்வதை தடுக்கவும், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் 39 எம்.பி.,க்களும், பார்லிமென்டில் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மத்திய அரசும் காலம் தாழ்த்தாது, உடனடியாக இலங்கை அரசுடன் பேசி, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.