முதல் கையெழுத்து டாஸ்மாக் கடைகளை மூடுவது தான்: செல்லுார் ராஜு பேச்சால் குழப்பம்
முதல் கையெழுத்து டாஸ்மாக் கடைகளை மூடுவது தான்: செல்லுார் ராஜு பேச்சால் குழப்பம்
UPDATED : பிப் 02, 2026 11:56 AM
ADDED : பிப் 02, 2026 05:50 AM

“அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மீண்டும் முதல்வரானதும், முதல் கையெழுத்து மதுக்கடைகளை மூடுவதாகத்தான் இருக்கும். தமிழகத்தில் ஒரு சொட்டு மது கூட இருக்காது,” என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு தெரிவித்தார்.
'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், மதுரை தெற்கு தொகுதி பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்படும்' என அக்கட்சியினர் நம்புகின்றனர். அதற்கேற்ப தொகுதி பொறுப்பாளராக, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அ.தி.மு.க.,வினர் முந்திக்கொண்டு, பிரசாரத்தை துவக்கினர்.
வரி மேல் வரி அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, முனிச்சாலையில் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தை துவக்கி வைத்து, அ.தி.மு.க., சாதனைகள் குறித்த நோட்டீஸ்களை மக்களிடம் வழங்கினார்.
இத்தொகுதியில் போட்டியிட, அ.தி.மு.க., சார்பில் 27 பேர் விருப்ப மனு அளித்த நிலையில், பிரசாரத்தை துவக்கியுள்ளனர்.
இது குறித்து செல்லுார் ராஜுவிடம் கேட்டபோது, “மதுரை தெற்கு தொகுதி அ.தி.மு.க., கோட்டை. பா.ஜ.,வுக்கு இத்தொகுதியை ஒதுக்கினாலும், அ.தி.மு.க., அரசின் ௧௦ ஆண்டு கால சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்பதில் தவறு இல்லை.
''அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளையும் ஒரே மாதிரியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்,” என்றார். முன்னதாக, முனிச்சாலை பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது, அவர்களிடம் செல்லுார் ராஜு பேசியதாவது:
'ஒவ்வொருவர் வாழ்விலும் விடியலை ஏற்படுத்துவோம்' என சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க., மக்களுக்கு கஷ்டத்தையும் நஷ்டத்தையும் மட்டுமே தந்துள்ளது.
தி.மு.க., ஆட்சியில் வரி மேல் வரி விதிப்பதால், தமிழக மக்கள் அவதிப்படுகின்றனர். அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை, சொல்வதைத்தான் செய்யும்; செய்வதைத்தான் சொல்லும். இனி, சொல்லாததையும் அ.தி.மு.க., செய்யும்.
தி.மு.க., ஆட்சியில் மின் கட்டண உயர்வால், மின் விசிறியை கூட போடுவதற்கு மக்கள் தயங்குகின்றனர். தி.மு.க., அரசில் புதுசு புதுசாக ஊழல் செய்கின்றனர். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன.
மது விற்பனை இன்றைய முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் மதுக்கடையை மூடுவோம்' என உறுதி அளித்தார்.
ஆனால் மூடினாரா? மதுக்கடைகளின் எண்ணிக்கையைத்தான் அதிகமாக்கி உள்ளனர். தமிழகத்தில் மது விற்பனை, பயன்பாடு அதிகரித்துள்ளது. அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மதுக்கடைகளை அகற்ற உத்தரவிடப்படும்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, மீண்டும் முதல்வரானதும், போடும் முதல் கையெழுத்து, மதுக்கடைகளை மூடுவதாகத்தான் இருக்கும். தமிழகத்தில் ஒரு சொட்டு மது கூட இல்லாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
ஏற்கனவே, ஆண்களின் ஓட்டுகளை கவருவதற்காக, 'அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், நகர பேருந்துகளில் பெண்களுக்கு நிகராக ஆண்களுக்கும் இலவச பயணம் திட்டம் அமல்படுத்தப்படும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ள நிலையில், மதுவிலக்கு தொடர்பாக செல்லுார் ராஜு பேசியுள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருவது, பழனிசாமியை அதிர்ச்சி அடைய வைத்திருப்பதாக கட்சியினர் கூறுகின்றனர்.
- நமது நிருபர் -

