கடன் வாங்குவதில் தான் 'சூப்பர் முதல்வர்' ஸ்டாலின் குறித்து பழனிசாமி ஆவேசம்
கடன் வாங்குவதில் தான் 'சூப்பர் முதல்வர்' ஸ்டாலின் குறித்து பழனிசாமி ஆவேசம்
ADDED : ஜூலை 13, 2025 03:32 AM

கடலுார்: 'தமிழக முதல்வர் ஸ்டாலின் கடன் வாங்குவதில்தான் சூப்பர் முதல்வர் என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி பேசினார்.
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் கடலுாரில் நேற்று அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது, அவர் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மக்கள் நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சியில் இரண்டு முறை விவசாய கடன் தள்ளுபடி செய்தோம்.
ஏழைகள் பாதிக்கப்படும் போதெல்லாம் ஓடோடி வந்து உதவி செய்தது அ.தி.மு.க., அரசு.
சட்டசபைத் தேர்தலுக்கு ஓட்டுகள் வாங்க கவர்ச்சிகரமான அறிவிப்புகளை தற்போது வெளியிடுகின்றனர். முதல்வர் ஸ்டாலின் பேசும் போதெல்லாம் தன்னை சூப்பர் முதல்வர் என்று கூறுகிறார்.
கடன் வாங்குவதில் மட்டும்தான் அவர் சூப்பர் முதல்வர். மகளிர் உரிமைத்தொகை கொடுக்க கூட நிதி இல்லை. இதற்காக 4 லட்சத்து 38,000 கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.
நடப்பாண்டில் ஒரு லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளனர். கடனை மக்கள் தலையில் சுமத்துகின்றனர். வீடு, கடைகளுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளன. மின் கட்டணத்தை கேட்டாலே 'ஷாக்' அடிக்கிறது.
மக்களை ஏமாற்றி ஓட்டுகளை பெறுவதில் தி.மு.க., விஞ்ஞான மூளை படைத்த கட்சி. டாஸ்மாக்கில் ஆண்டிற்கு 5,400 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடக்கிறது.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் மக்களின் ஞாபகம் வந்துள்ளது. நான்கரை ஆண்டு களாக மக்கள் மீது அக்கறை இல்லாதவர். வீடு, வீடாக வந்து தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை பணி நடக்கிறது.
மகளிர் உரிமைத் தொகை, உதவித்தொகை, நலத்திட்ட உதவிகளை நிறுத்திவிடுவோம் என மிரட்டி உறுப்பினர் சேர்க்கை நடத்துகின்றனர். இவ்வாறு பழனிசாமி பேசினார்.