பண்பாடே இல்லாமல் பழனிசாமி பேசுவது வேதனை: ஸ்டாலின்
பண்பாடே இல்லாமல் பழனிசாமி பேசுவது வேதனை: ஸ்டாலின்
ADDED : நவ 13, 2024 06:32 AM

சென்னை : 'பண்பாடே இல்லாமல், அநாகரிகமாக பேசுவதை கொள்கையாக கொண்டிருக்கும் ஒரு சில அரசியல் கட்சி தலைவர்களை போலவே, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசுவதை எண்ணி வேதனைப்படுகிறேன்' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:
இந்த ஆட்சி மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, முதல்வர் என்ற பொறுப்பில் நின்று, பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாதபடி, ஆட்சியின் தன்மையை மக்களின் முகமலர்ச்சியே பதிலாக சொல்லி விடுகிறது.
கோவை, விருதுநகருக்கு மேற்கொண்ட பயணம் முழுமையான வெற்றியாக அமைந்தது. வரும் 2026 சட்டசபை தேர்தலில், 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை அடைவதற்கு சாதாரண உழைப்பு போதாது; சதிகளை முறியடிகக் கூடிய சளைக்காத உழைப்பு தேவை.
நியாயமாக கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகளை பெறுவதில், ஒருவர் கூட விடுபடக்கூடாது என்ற அக்கறை எனக்கு மட்டுமின்றி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரை இருப்பதால், மக்களின் தேவையறிந்து நிறைவேற்ற முடிகிறது.
இதை பொறுக்க முடியாமல்தான், அரசியலில் எதிர்முகாமில் இருப்பவர்கள், வன்மத்துடன் வார்த்தைகளை வெளிப்படுத்துகின்றனர்; வதந்திகளை பரப்புகின்றனர்; வயிற்றெரிச்சலில் புலம்புகின்றனர்.
எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் பழனிசாமி, தன் நிலையை மறந்து விமர்சிக்கிறார். கருணாநிதி பெயரிலான திட்டங்களும், கட்டடங்களும் மக்களுக்கு பெரும் பயன் அளிப்பதை கண்டு, பொறுக்க முடியாமல், அநாவசியமாக பொங்குகிறார்.
கருணாநிதியை போலவே மக்கள் நலனுக்காக பாடுபட்ட தலைவர்களை போற்றவும், இந்த அரசு தவறியதில்லை. பண்பாடே இல்லாமல், அநாகரிகமாக பேசுவதையே கொள்கையாக கொண்டிருக்கும் ஒரு சில அரசியல் கட்சி தலைவர்களை போலவே, பழனிசாமி பேசுவதையும், இப்படிபட்டவருடன் சட்டசபையில் விவாதிக்க வேண்டியிருக்கிறதே என்று எண்ணியும் வேதனைப்படுகிறேன்.
வன்மம் கக்கும் வயிற்றெரிச்சல்காரர்களை கடந்து செல்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறேன். மக்கள் நம் பக்கம் இருப்பதால்தான், மாற்று முகாம் கலக்கத்தில் என்னென்னவோ பேசுகிறது.
ஆனால், ஆட்சியின் சாதனைகள் என்ன என்பதை உலகம் அறிந்திருக்கிறது. இந்த ஆட்சியின் ஒவ்வொரு நாளும் மக்களின் நலன் காக்கும் நாட்கள் தான்.
ஒவ்வொரு மாவட்ட சுற்றுப்பயணத்திலும் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். அதைப் பார்த்து சிலர் வயிறு எரிகின்றனர்; ஏதேதோ பேசுகின்றனர். அவர்கள் பேசட்டும்; நாம் சாதிப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

