ADDED : ஜன 04, 2024 10:45 PM
சென்னை:அவதுாறு வழக்கில், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அட்வகேட் கமிஷனரிடம், அ.தி.மு.க.,பொதுச் செயலர் பழனிசாமி சாட்சியம் அளித்துள்ளார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்டிரைவர் கனகராஜ். இவர், சாலை விபத்தில் உயிரிழந்தார். கனகராஜின் சகோதரர் தனபால், கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக பேட்டி அளித்திருந்தார்.
இந்த வழக்கில் தன்னை தொடர்புப்படுத்தி பேச, தனபாலுக்கு தடை விதிக்கவும், 1.10 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தனபாலுக்கு தடை விதித்தது. வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்ய, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 'மாஸ்டர் கோர்ட்'டுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, மாஸ்டர்கோர்ட்டில் நேரில் ஆஜராக இயலாது என்றும், தன் வீட்டில் வைத்து சாட்சியம் பதிவு செய்ய அட்வகேட் கமிஷனரை நியமிக்கவும் கோரி, பழனிசாமி மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சாட்சியங்களை பதிவு செய்ய, வழக்கறிஞர் கார்த்திகை பாலன் என்பவரை நியமித்தது.
ஒரு மாதத்துக்குள் சாட்சியங்களை பதிவு செய்து, ஜனவரி 12ல் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இதையடுத்து, சென்னையில் உள்ள பழனிசாமியின் இல்லத்துக்கு நேற்று சென்று, அவரது சாட்சியத்தை, வழக்கறிஞர் கார்த்திகை பாலன் பதிவு செய்தார்.
இதுகுறித்த அறிக்கையை, விரைவில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.