பயன்பாட்டுக்கு வந்தது பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடியது மத்திய பஸ் ஸ்டாண்ட்
பயன்பாட்டுக்கு வந்தது பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடியது மத்திய பஸ் ஸ்டாண்ட்
ADDED : ஜூலை 17, 2025 02:43 AM

திருச்சி:திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில்பஞ்சப்பூரில் ஏசி வசதியுடன் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.
தினமும் 3200க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்லும் வகையிலும், 401 பஸ்கள் நிறுத்தும் வகையிலும், 40 ஏக்கரில் 246 கோடி செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்டை கடந்த மே 9ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவின் நேரடி கண்காணிப்பில் கட்டி முடிக்கப்பட்டு முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட இந்த பஸ் ஸ்டாண்ட் 46நாட்களுக்கு பின் நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
நேற்று காலை 6:00 மணியளவில் அமைச்சர் நேரு கொடியசைத்து ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் இயக்கத்தை துவக்கி வைத்தார்.
வெறிச்சோடியது மத்திய பஸ் ஸ்டாண்ட்
தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாவட்டத்தில் பிரதான அடையாளமாக திகழ்ந்த மத்திய பஸ் ஸடாண்டுக்கு தினமும் 1500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து சென்றன. தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணியர் வந்து சென்றனர்.
கடந்த 1972-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வராக இருந்த பக்வத்சலம் இந்த பஸ் ஸ்டாண்டை திறந்து வைத்தார். நேற்று முதல் பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து தொலைதுார பஸ்கள் இயக்கப்பட்டல் 53 ஆண்டுகள் பழமையான மத்திய பஸ் ஸ்டாண்டில் நேற்றுடன் (ஜூலை 16) வெளியூர் பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது.
டவுன் பஸ்கள் மட்டுமே வந்து சென்றதால் 24 மணிநேரமும் பரபரப்பாக இயங்கிய மத்திய பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடியது.