ADDED : செப் 28, 2024 07:16 PM
சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், தொடர் மின்வெட்டு ஏற்படுவதற்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலாப்பூர், அடையாறு, வேளச்சேரி உட்பட பல பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும், கடந்த மூன்று நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
இதனால் பொதுமக்களின் இயல்பான வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து பணி செய்வோர் கடும் நெருக்கடிக்கு ஆளாகினர். இது குறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டால், 'மின்மாற்றிகள் சரியில்லை, மின் சாதனைங்கள் பழுதடைந்துள்ளன' என்கின்றனர்.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்த நிலையில், மின் சாதனங்கள் பழுது எனக் கூறுவது ஏற்புடையதல்ல. மின்சாரத்தில் இருந்து வரும் வருமானம் கணிசமாக உயர்ந்த நிலையில், முறையான மின் கட்டமைப்பை தி.மு.க., அரசு ஏற்படுத்தாதது கண்டனத்துக்கு உரியது. இது தி.மு.க., அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.