பணி நிரந்தரம் கோரி பேரணி பகுதிநேர ஆசிரியர்கள் கைது
பணி நிரந்தரம் கோரி பேரணி பகுதிநேர ஆசிரியர்கள் கைது
ADDED : டிச 11, 2024 02:00 AM

சென்னை:பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்களை, போலீசார் கைது செய்தனர்.
அரசு பள்ளிகளில், 16,000 பகுதிநேர ஆசிரியர்கள், அ.தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாத ஊதியம், 12,500 ரூபாய். அதனால், பணி நிரந்தரம் கோரி, அ.தி.மு.க., ஆட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்' என்று கூறியதுடன், தேர்தல் வாக்குறுதியாகவும் அறிவித்தார்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்து, மூன்று ஆண்டுகளாகியும் பணி நிரந்தரம் செய்யப்படாததால், பகுதிநேர ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த, 6ம் தேதி, பகுதிநேர ஆசிரியர்களுடன் தமிழக அரசு நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது.
இதனால், சென்னையில் கோட்டை நோக்கி பேரணி நடத்தும் வகையில், எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, 1,800க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பதாகைகள் ஏந்தி கோட்டை நோக்கி செல்ல முயன்ற போது, அவர்களை போலீசார் கைது செய்து கண்ணப்பர் திடல் சமுதாய நலக்கூடத்தில், தங்க வைத்தனர்.
இதற்கிடையில் சமுதாய நலக்கூடத்தில், தங்க வைக்கப்பட்டிருந்த போது கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை மலர்விழி, 38 மயங்கி விழுந்தார்.
உடனே போலீசார் அவரை, அருகில் உள்ள, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.