பொங்கல் பண்டிகையிலும் தொடரும் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்
பொங்கல் பண்டிகையிலும் தொடரும் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்
ADDED : ஜன 16, 2026 08:00 AM

சென்னை: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராட்டதில் ஈடுபட்ட ஆசிரியர் கண்ணனுக்கு நீதி வேண்டி போராடிய பகுதி நேர ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், பணி நிரந்தரம் செய்ய வலியுறித்தி, கடந்த 8ம் தேதி முதல் பகுதிநேர ஆசிரியர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் 2,500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். இதனை, ஏற்க மறுத்த பகுதி நேர ஆசிரியர் கூட்டு இயக்க நிர்வாகிகள், பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.
அதன்படி, பொங்கல் பண்டிகையான நேற்று எட்டாம் நாளாக, 500க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள், டி.பி.ஐ., அலுவலகம் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது உயிரிழந்த பகுதி நேர ஆசிரியர் கண்ணனுக்கு நீதி வேண்டியும், தி.மு.க.,வின் சட்டசபை தேர்தல் வாக்குறுதி எண். 181ஐ நிறைவேற்ற வலியுறுத்தியும், பதாகைகளை ஏந்தியவாறு கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது போலீசாருடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து, அவர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர். ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏற்றி, கிண்டி. தாம்பரம், கிளாம்பாக்கம், செங்கல்பட்டு என வெவ்வேறு பகுதிகளில், ஆசிரியர்களை இறக்கி விட்டனர்.

