ரயில்வே செயலியில் அடிக்கடி பிரச்னை தகவல் பெற முடியாமல் பயணியர் தவிப்பு
ரயில்வே செயலியில் அடிக்கடி பிரச்னை தகவல் பெற முடியாமல் பயணியர் தவிப்பு
ADDED : அக் 08, 2025 04:02 AM
சென்னை:என்.டி.இ.எஸ்., ரயில்வே செயலியில், அடிக்கடி பிரச்னை ஏற்படுவதால், பயணியர் உண்மையான தகவல் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.
ரயில்களின் இயக்கம் உட்பட பல்வேறு சேவை குறித்து அறிந்து கொள்ள, 'நேஷனல் ட்ரெயின் என்கொயரி சிஸ்டம்' எனும் செயலி, ரயில்வே பயன்பாட்டில் உள்ளது.
இதில், நாடு முழுதும் ரயில்களின் வருகை, புறப்படும் நேரம், வழித்தடம், ரயில்கள் வரும் நடைமேடை, ரயில்களின் சேவையில் மாற்றம், ரயில்கள் ரத்து தொடர்பான தகவல்கள் இடம் பெறும்.
ஆனால், இந்த செயலியை மேம்படுத்தாமல் இருப்பதால், அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதாக, பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, ரயில் பயணியர் சிலர் கூறியதாவது:
ரயில்வேயின் அதிகாரப்பூர்வ செயலியாக என்.டி.இ.எஸ்., உள்ளது. வழக்கமாக ரயில்கள் செல்லும் நேரம், வழித்தட விபரங்கள் இருக்கின்றன.
ஆனால், ரயில்களின் சேவை மாற்றம், ரயில்கள் ரத்து போன்ற தகவல்கள் சரியாக இடம் பெறுவதில்லை. பெரும்பாலான ரயில் நிலையங்களில் ரயில்களின் சேவை மாற்றம் அறிவிக்கப்படுவதில்லை.
இதனால், பயணியர் சிலர் இந்த செயலியில் வரும் தகவலை நம்பி காத்திருக்க வேண்டியுள்ளது. உண்மையான தகவல் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
தினமும் பல லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் செயலியை தரம் உயர்த்தி, பயணியருக்கு சிரமம் இல்லாமல், தகவல் கிடைக்க, ரயில்வே துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'மொபைல் போனில் 'நெட்வொர்க்' பிரச்னை இருந்தாலும், செயலியில் தகவல் பெற முடியாது. இருப்பினும், பயணியர் புகார் குறித்து ஆய்வு செய்யப்படும்' என்றனர்.