sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விதிமீறல் குவாரிகளை காப்பாற்ற சமாதான திட்டம்; அமைச்சரின் ஆதரவால் அரசுக்கு நெருக்கடி

/

விதிமீறல் குவாரிகளை காப்பாற்ற சமாதான திட்டம்; அமைச்சரின் ஆதரவால் அரசுக்கு நெருக்கடி

விதிமீறல் குவாரிகளை காப்பாற்ற சமாதான திட்டம்; அமைச்சரின் ஆதரவால் அரசுக்கு நெருக்கடி

விதிமீறல் குவாரிகளை காப்பாற்ற சமாதான திட்டம்; அமைச்சரின் ஆதரவால் அரசுக்கு நெருக்கடி

2


UPDATED : ஏப் 21, 2025 05:36 AM

ADDED : ஏப் 21, 2025 05:34 AM

Google News

UPDATED : ஏப் 21, 2025 05:36 AM ADDED : ஏப் 21, 2025 05:34 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக, கனிமங்களை வெட்டி எடுத்த குவாரிகளுக்கு, பொது மன்னிப்பாக, சமாதான திட்டத்தை அறிவிக்க வேண்டும்' என்ற கோரிக்கைக்கு, அமைச்சர் துரைமுருகன் ஆதரவு அளிப்பதால், தமிழக அரசுக்கு, 1,500 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், 3,000க்கும் மேற்பட்ட இடங்களில், தனியார் பட்டா நிலங்களில், கருங்கல் குவாரிகள் செயல்படுகின்றன. இந்த குவாரிகளுக்கு அனுமதி வழங்கும் போது, சுற்றுச்சூழல் துறை, புவியியல் மற்றும் சுரங்க துறையினர் பல்வேறு நிபந்தனைகள் விதிப்பது வழக்கம்.

கணக்கில் வருவதில்லை


இதன்படி, ஒவ்வொரு குவாரியிலும், குறிப்பிட்ட ஐந்து ஆண்டுகளுக்கு, எத்தனை கன மீட்டர் அளவுக்கு கனிமங்களை எடுக்க வேண்டும் என்ற வரையறை உள்ளது. தற்போது இந்த அளவீடு, கனமீட்டருக்கு பதிலாக, டன் கணக்கில் அளவிடும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுஉள்ளது.

இதில், அரசு ஐந்து ஆண்டுகளுக்கு அனுமதித்த அளவை, பெரும்பாலான குவாரி உரிமையாளர்கள், முதல் அல்லது இரண்டாம் ஆண்டிலேயே வெட்டி எடுத்து விடுகின்றனர். மீதி காலத்தில் எடுக்கப்படும் கனிமங்கள் அரசின் கணக்கில் வராமல் போகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக, கனிமவளத்துறை அதிகாரிகள், இது விஷயத்தில் கிடுக்கிப்பிடி போட துவங்கி உள்ளனர். ஒவ்வொரு குவாரிக்கும், அனுமதி புதுப்பிக்க வரும் போது, துல்லியமான சர்வே மேற்கொள்ளப்படுகிறது.

இதில், அனுமதிக்கப்பட்டதை விட, அதிக அளவில் கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்ட விபரம் கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான ராயல்டி உள்ளிட்ட தொகைகளை, அபராதத்துடன் செலுத்துமாறு, உரிமையாளர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்புகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, 90 சதவீத குவாரிகளில், இத்தகைய விதிமீறல்கள் நடந்துள்ளன. இதற்காக உரிமையாளர்களுக்கு, 10 கோடி முதல், 250 கோடி ரூபாய் வரை, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தம்


இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அல்லது பசுமை தீர்ப்பாயம் வாயிலாக மேல் முறையீடு செய்தால், 10 சதவீதம் மட்டுமே குறைய வாய்ப்புள்ளது. இந்த கிடுக்கிபிடியில் இருந்து தப்பிக்க, குவாரி உரிமையாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.

எனவே, வணிக வரித்துறையில் செயல்படுத்தப் பட்டது போல, கல் குவாரிகளுக்கும் சமாதான திட்டம் அறிவித்து, பொது மன்னிப்பு அடிப்படையில் அபராதங்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உட்பட, 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக கல் குவாரி, கிரஷர் உரிமையாளர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக, அமைச்சர் துரைமுருகன் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து கனிம வளத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசின் கொள்கை முடிவு அடிப்படையில் தான், குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்ளுக்கான அளவீடு நடைமுறை மாற்றப்பட்டது. இதன் அடிப்படையிலேயே நில வரி திட்டமும் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், விதிமீறல் குவாரிகளுக்கான அபராதங்களை தள்ளுபடி செய்யும் சமாதான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று, உரிமையாளர்கள் வலியுறுத்துகின்றனர். இதற்கு அமைச்சர் துரைமுருகன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கொள்கை முடிவு


விதிகளை மீறியவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கும் சமாதான திட்டத்தை செயல்படுத்தினால், அரசுக்கு, 1,500 கோடி ரூபாய்க்கு மேல், வருவாய் இழப்பு ஏற்படும்.

தற்போதுள்ள சட்ட விதிகளின்படி, இது சாத்தியமில்லை என அமைச்சரிடம் தெரிவித்து இருக்கிறோம். இந்த விஷயத்தில் முதல்வர் சம்மதித்தாலும், அமைச்சரவை கூட்டம் வாயிலாக, புதிய கொள்கை முடிவு எடுத்தால் மட்டுமே தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us