ரியல் எஸ்டேட் சட்டப்படி பதியாமல் வீடு, மனை விற்றால் ரூ.15,000 அபராதம்
ரியல் எஸ்டேட் சட்டப்படி பதியாமல் வீடு, மனை விற்றால் ரூ.15,000 அபராதம்
ADDED : நவ 16, 2024 11:23 PM
சென்னை: 'ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்யாமல் விற்கப்படும், வீடு, மனைகளுக்கு தலா, 15,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்' என, ரியல் எஸ்டேட் ஆணையம் அறிவித்துள்ளது.
ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்டப்படி, 5,381 சதுர அடி, அதற்கு மேற்பட்ட பரப்பளவில் மேற்கொள்ளப்படும் கட்டுமான திட்டங்களை, இந்த ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
புதிய உத்தரவு
ஆணையத்தில் பதிவு செய்யாமல், வீடு, மனைகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது, புகார் விசாரணைக்கு வரும் போது தான் அபராதம் விதிக்கப்படுகிறது.
அதுவும், 1 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை என, பொதுவான கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கான நடைமுறைகளை மாற்ற ஆணையம் முடிவு செய்து, புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்யாமல், விற்கப்படும் வீடு, மனைகளுக்கு எண்ணிக்கை அடிப்படையில் அபராதம் நிர்ண யிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி பகுதியில், தலா, 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், ஆவடி, தாம்பரம், வேலுார், திருநெல்வேலி, தஞ்சாவூர், துாத்துக்குடி மாநகராட்சிகளில், தலா, 12,000 ரூபாய் அபராதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சென்னை பெருநகர எல்லையில் வரும் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், திண்டுக்கல், ஓசூர், நாகர்கோவில், கடலுார், காஞ்சிபுரம், கரூர், சிவகாசி, கும்பகோணம், காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை மாநகராட்சிகளில் தலா, 10,000 ரூபாய் அபராதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஊராட்சிகளில் ரூ.3,000
பிற நகராட்சிகளில் வீடு, மனைகளுக்கு தலா, 6,000 ரூபாய், பேரூராட்சிகளில் தலா 4,000 ரூபாய், ஊராட்சிகளில் தலா, 3,000 ரூபாய் என்ற அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும்.
இந்த தொகையை விதிக்கும் போது, மனைப்பிரிவு திட்டங்களில் அதன் மொத்த மதிப்பில் 2 சதவீதம்; அடுக்குமாடி குடியிருப்பு என்றால், அதில் விற்கப்பட்ட வீடுகளின் மதிப்பில், 1 சதவீதம் ஆகியவற்றில், எது அதிகம் என்ற அடிப்படையில் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.