இதே வேலையா போச்சு... மக்கள் புறக்கணித்தும் புத்தி வரலையா; காங்கிரஸ் மீது எல்.முருகன் பாய்ச்சல்
இதே வேலையா போச்சு... மக்கள் புறக்கணித்தும் புத்தி வரலையா; காங்கிரஸ் மீது எல்.முருகன் பாய்ச்சல்
ADDED : டிச 18, 2024 09:28 PM

சென்னை: 'காங்கிரஸ் கட்சிதான் அம்பேத்கர் வகுத்த இடஒதுக்கீட்டுக்கும் எதிரான கட்சி. மக்கள் தலைவர்களுக்கு எதிராக செயல்பட்டதால் தான் காங்கிரஸ் இன்று ஆட்சி அதிகாரத்தை இழந்து மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது,' என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய பேச்சை வேண்டுமென்றே திரித்து பேசுகிற காங்கிரஸ் கட்சிக்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாம் பேசியது என்ன என்பது குறித்து அமித்ஷா தெளிவான விளக்கத்தை தந்துள்ளார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்த பாபசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தியதும் அவர் உருவாக்கிய அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்பட்டு வருவதும் காங்கிரஸ் கட்சி தான். அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி எப்படி நடத்தியது என்பதை அமித்ஷா வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.
அம்பேத்கருக்கு அவரது மரணத்துக்குப் பின்னர் கூட பாரத ரத்னா தர மறுத்து வேடிக்கை காட்டிய கட்சிதான் காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தங்களுக்கு தானே பல முறை பாரத ரத்னா விருதைக் கொடுத்துக் கொண்டார்கள். 1955ம் ஆண்டு நேரு தமக்கு தாமே பாரத ரத்னா விருது பெற்றுக் கொன்டார். 1971ம் ஆண்டு இந்திரா காந்தி தமக்கு தாமே பாரத ரத்னா விருது வழங்கிக் கொண்டார். ஆனால் 1990ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத காலத்தில், பா.ஜ., ஆதரவுடனான மத்திய அரசு ஆட்சியில் இருந்த போதுதான், அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அம்பேத்கர் மீதான நேருவின் வெறுப்பை நாடு நன்கு அறியும்.
அதே சமயம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அம்பேத்கரை பெருமை சேர்த்து வருவதை நாடறியும். அம்பேத்கர் அவர்களின் புகழை உலகம் முழுவதும் பா.ஜ., பரப்பி வருகிறது. அம்பேத்கர் இயற்றிய சட்டங்களை உரிய முறையில் அமல்படுத்தி அனைவருக்கும் உரிய நீதி என்ற உன்னத கோட்பாட்டை செயல்படுத்தி வருவதும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தான்.
தேர்தல் சமயத்தில் அமித்ஷாவின் பேச்சை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடிட் செய்து திரித்து காங்கிரஸ் வெளியிட்டது. அதேபோல, தற்போதும் காங்கிரஸ் திரித்து கூறும் வேலையை மீண்டும் செய்கிறது. காங்கிரஸ் கட்சி நேற்று முதல் உண்மையை மறைத்து திரித்து தொடர்ந்து பொய் மூட்டைகளை அவிழ்ந்து விடுகிறது. காங்கிரஸ் கட்சிதான் அம்பேத்கர் வகுத்த இடஒதுக்கீட்டுக்கும் எதிரான கட்சி. மக்கள் தலைவர்களுக்கு எதிராக செயல்பட்டதால் தான் காங்கிரஸ் இன்று ஆட்சி அதிகாரத்தை இழந்து மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
திரித்துகூறும் அரசியலை பாரத நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. இந்த அவதூறு பிரசாரம் தொடர்ந்தால் காங்கிரஸை மக்கள் தேர்தல் களத்தில் இருந்தே அகற்றி விடுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.