மக்களே உஷாராக இருங்க; சென்னையில் கொரோனா தொற்றால் முதியவர் பலி
மக்களே உஷாராக இருங்க; சென்னையில் கொரோனா தொற்றால் முதியவர் பலி
ADDED : மே 28, 2025 01:36 PM

சென்னை: சென்னை மறைமலை நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மோகன் (வயது 60) என்பவர் உயிரிழந்தார்.
கொரோனா தொற்று சமீபகாலமாக தாய்லாந்து, சிங்கப்பூர், மலேஷியா ஆகிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. நம் நாட்டிலும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. மஹாராஷ்டிரா, குஜராத், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது.
இரு புதிய வகைகள்
சமீபகாலமாக அதிகரித்து வரும் தொற்று குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை என, தெரிவித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், பொது இடங்களில் பாதுகாப்பாகவும், எச்சரிக்கை உணர்வுடனும் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. நம் நாட்டில் என்.பி. 1.8.1., மற்றும் எல்.எப். 7., ஆகிய இரு புதிய கொரோனா வகைகள் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது.
முதியவர் பலி
கேரளா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில் இன்று (மே 28) சென்னை மறைமலை நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மோகன் (வயது 60) என்பவர், மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும், தமிழகத்தில் 60க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.