'தி.மு.க., அரசை நீக்க மக்கள் முடிவு எடுத்து விட்டனர்' : மதுரையில் எச்.ராஜா பேட்டி
'தி.மு.க., அரசை நீக்க மக்கள் முடிவு எடுத்து விட்டனர்' : மதுரையில் எச்.ராஜா பேட்டி
ADDED : ஜூலை 12, 2025 04:28 AM
மதுரை : ''தி.மு.க., அரசை நீக்க வேண்டும் என மக்கள் முடிவு எடுத்து விட்டனர். கட்சிகளின் எண்ணிக்கை மட்டும் தேர்தலில் வெற்றியை முடிவு செய்யாது,'' என, மதுரையில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்தார்.
அவர் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் தேசிய ஜனநாயகக்கூட்டணி வரும் முன்னர் தி.மு.க.,வை வீழ்த்த முடியாத நிலை இருந்தது. அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணி அமைத்த 6 மணி நேரத்தில் தி.மு.க.,வினர் பொருந்தா கூட்டணி என விமர்சித்தனர். ஆனால் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி யாத்திரையில் பா.ஜ., தொண்டர்களும் தீவிரமாக பணிபுரிவதை பார்க்க முடிகிறது. தி.மு.க.,விற்கு மாற்று உள்ளது என்ற நம்பிக்கை மக்களிடம் வந்துள்ளது. தற்போதைய கூட்டணியில் பா.ம.க., மட்டும் தான் முடிவு செய்யப்படாமல் உள்ளது.
கட்சிகளின் எண்ணிக்கை மட்டும் வெற்றியை முடிவு செய்யாது. மறைந்த பிரதமர் இந்திராவுக்கு எதிராக 1971ல் சோசியலிஸ்ட், ஸ்தாபன காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தன. ஆனால் அவரை தோற்கடிக்க முடியவில்லை. அந்த கூட்டணி கட்சிகள் இணைந்து 1977ல் ஜனதா கட்சி பெயரில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. மக்கள் மனமாற்றத்தால் காங்கிரஸை தோற்கடிக்க முடிந்தது. அதுபோல் இன்றைக்கு தி.மு.க., அரசை நீக்க மக்கள் முடிவு செய்து விட்டனர். எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும், சேராவிட்டாலும் எங்கள் கூட்டணி வெற்றி உறுதி.
ஹிந்து விரோத அரசை நீக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே வந்ததால் தான் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றி அடைந்தது. தி.மு.க., முருகனை கையில் எடுத்தது எங்களின் வெற்றி. ஹிந்து கடவுளை எதிர்த்த தி.முக.,வினர் தற்போது நாங்களும் ஹிந்து என்று சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கோயில் நிலம்
தமிழகத்தில் 4 லட்சத்து 78 ஆயிரத்து 521 ஏக்கர் நிலம் கோயிலுக்கு சொந்தமாக உள்ளது. தி.மு.க., ஆட்சியில் பல்வேறு கோயில் நிலங்கள் மீட்கப்பட்டதாக கூறுகின்றனர். அப்படி என்றால் ஆக்கிரமிக்க அனுமதி கொடுத்தது யார். கோயில் நிலங்களை 5 ஆண்டுகளுக்கு மேல் குத்தகைக்கு விட முடியாது. ஏற்கனேவே குத்தகைக்கு விடப்பட்ட நிலங்களை வாங்கிவிட்டு கோயில் நிலங்களை மீட்டதாக பரப்புகின்றனர்.
திருவண்ணாமலை கோயில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள விடுதி, தமிழ்நாடு ஓட்டலுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. முன்னதாக ரூ.600 என இருந்த வாடகை கட்டணம் தற்போது ரூ.1,200 ஆக உயர்ந்துள்ளது.
தி.மு.க., என்றால் ஊழல்
மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு மோசடியில் மண்டல தலைவரை நீக்குவதை தவிர்த்து மேயர், துணை மேயரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். கும்பகோணம் மாநகராட்சியில் ரூ.300 கோடி ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. தி.மு.க., ஆட்சி என்றால் ஊழல் எனும் நிலை உள்ளது.
இவ்வாறு கூறினார்.

