பொங்கலுக்காக முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா தென்மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
பொங்கலுக்காக முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா தென்மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 06, 2025 03:22 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: தைப்பொங்கலை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயங்கும் அனைத்து ரயில்களிலும் வெயிட்டிங் லிஸ்ட் நிலை இருப்பதால் ஜன. 11, 12, 13 ல் சென்னை,  கோவையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கும்,  மறு மார்க்கத்தில் ஜன. 17,18, 19 ல் சென்னை, கோவைக்கும்  முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டுமென தென் மாவட்ட மக்கள்  எதிர்பார்க்கின்றனர்.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னை, கோவையில் வசிக்கின்றனர்.  இவர்கள் தைப்பொங்கலை முன்னிட்டு தங்கள் சொந்த ஊருக்கு வந்து செல்ல சென்னையிலிருந்து இயங்கும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்துள்ளதால், தற்போது வெயிட்டிங் லிஸ்ட் நிலை காணப்படுகிறது. சிறப்பு ரயில்களிலும் இதே நிலை தொடர்கிறது.
இதுபோல் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு பகலில் முன்பதிவில்லா  ரயிலும், இரவில் முன்பதிவு வசதி கொண்ட ஒரு ரயிலும்  இயங்குகிறது. சாதாரண நாட்களில் கூட எளிதாக  டிக்கெட் கிடைக்காத நிலை தான் இந்த ரயிலில் உள்ளது. கோவையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் தைப்பொங்கலுக்கு வந்து செல்வதற்கு சிறப்பு ரயில்கள்  இயக்கப்படவில்லை.
இதனால் சென்னை, கோவையில் இருந்து மதுரை, திருநெல்வேலி,குமரி மாவட்ட மக்கள் ரயிலில் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே ஜன. 11, 12, 13 ல்  சென்னை, கோவையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கும், மறு மார்க்கத்தில் ஜன. 17,18, 19 ல் நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரையில் இருந்து சென்னை,  கோவைக்கும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் இயக்க வேண்டுமென தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

