மழையால் மக்கள் துயரம்: அரசு மீது விஜய் குற்றச்சாட்டு
மழையால் மக்கள் துயரம்: அரசு மீது விஜய் குற்றச்சாட்டு
ADDED : டிச 04, 2025 05:27 AM

சென்னை: த.வெ.க., தலைவர் விஜய் அறிக்கை:
சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதி களில் பெய்து வரும் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் முறையாகவும், முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே, மக்களின் இந்த துயரத்திற்கு காரணம்.
பொது மக்கள் தங்கள் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். மக்களுக்கு தேவையான உதவிகளை, த.வெ.க.,வினர் செய்ய வேண்டும்.
மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டு கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை. மக்கள் மீது, அரசுக்கு சிறிதேனும் அக்கறை இருந்திருந்தால், கொஞ்சமாக பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது.
மீதமுள்ள பருவ மழை காலத்திலாவது, மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையிலும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

