வடகலை பிரிவினருக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து: சென்னை ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு
வடகலை பிரிவினருக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து: சென்னை ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு
ADDED : டிச 02, 2025 05:08 AM

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பிரபந்தம் பாட, வடகலைப் பிரிவினருக்கு அனுமதி வழங்கி, கடந்த 2022ம் ஆண்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவில் எனப்படும் வரதராஜ பெருமாள் கோவிலில், பிரபந்தம் மற்றும் மந்திரம் பாடுவதில், வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்கு இடையில் பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது.
கோவில் பிரம்மோத்சவ விழாவில், தென்கலைப் பிரிவினர் மட்டுமே பிரபந்தம் பாட அனுமதிக்கும், கோவிலின் உதவி ஆணையர் உத்தரவை எதிர்த்து, வடகலை பிரிவை சேர்ந்தவர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 'கோவில் உள்ளே முதல் மூன்று வரிசையில் தென்கலை பிரிவினர்; அவர்களுக்கு பின் வடகலை பிரிவினர் அமர அனுமதிக்க வேண்டும்.
திவ்ய பிரபந்தம் முதலில் தென்கலை பிரிவினர் 'ஸ்ரீ சைல தயாபத்ரம்' படிக்கவும், அதன் பின் வடகலை பிரிவினர் 'ஸ்ரீ ராமானுஜ தயாபத்ரம்' படிக்கவும், அதைத் தொடர்ந்து இரு பிரிவினரும், நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடவும் அனுமதிக்க வேண்டும்.
'மணவாள மாமுனிகள் வாழி திருநாமம்' மந்திரம் பாட, தென்கலை பிரிவினரை அனுமதிக்க வேண்டும். அதன்பின், 'தேசிகன் வாழி திருநாமம்' பாட, வடகலை பிரிவினரை அனுமதிக்க வேண்டும்' என, கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்தும், வடகலை பிரிவினர் தலையிடுவதை தடுக்க, போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரியும், வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
மேலும், நீதிமன்றம் 1915ம் ஆண்டு தென்கலை பிரிவினருக்கு சாதகமாக அளித்த தீர்ப்பை அவமதித்ததாக கூறி, கோவில் உதவி ஆணையருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தனிப்பட்ட உரிமை இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு பிறப்பித்த உத்தரவு:
கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும், வடகலை, தென்கலை பிரச்னையில், வரத ராஜ பெருமாள் கோவிலில், பிரபந்தம் பாட தென்கலை பிரிவினருக்கு என, தனிப்பட்ட உரிமை வழங்கி, கடந்த 1915, 1969ம் ஆண்டுகளில், நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
காஞ்சிபுரத்தில் வசிக்கும் தென்கலை பிரிவினருக்கு தான் உரிமை பாத்தியப்பட்டது; வடகலை பிரிவினர், அந்த உரிமையில் தலையிட முடியாது என, கடந்த 1915, 1969ம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புகள் தெளிவுப்படுத்தி உள்ளன.
முந்தைய தீர்ப்புகள், வடகலை பிரிவினரை கட்டுப்படுத்தாது என்ற வாதம் ஏற்புடையதல்ல. எனவே, வடகலை பிரிவினரை, பிரபந்தம் பாட அனுமதித்து, 2022ம் ஆண்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
ஏற்கனவே 1915 மற்றும் 1969ம் ஆண்டுகளில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, கோவில் உதவி ஆணையர் அமல்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் காவல்துறை உதவியை கோரலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

