நடிகர் ரவி மோகனின் சொத்துகள் முடக்க கோரி வழக்கு தொடர அனுமதி
நடிகர் ரவி மோகனின் சொத்துகள் முடக்க கோரி வழக்கு தொடர அனுமதி
ADDED : ஆக 21, 2025 02:07 AM
சென்னை:கோவையை சேர்ந்த, 'பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்துடன், இரண்டு படங்களில் நடிக்க, நடிகர் ரவிமோகன் ஒப்பந்தம் செய்து கொண்டார். படத்துக்கு ஊதியமாக பேசப்பட்ட, 15 கோடி ரூபாயில், 6 கோடி ரூபாயை முன்பணமாக, ரவி மோகன் பெற்று கொண்டார்.
ஒப்பந்தப்படி படத்தில் நடிக்காமல், மற்ற படங்களில் நடித்ததால், முன்பணமாக பெற்ற 6 கோடி ரூபாயை, நடிகர் ரவிமோகன் திருப்பி அளிக்க உத்தரவிட கோரி, பாபி டச் கோல்ட் யுனிவர்சல் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதேபோல, 80 நாட்கள் 'கால்ஷீட்' ஒதுக்கியும், தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்பை துவக்காததால், தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு, 9 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட கோரி, நடிகர் ரவி மோகனும் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அப்துல் குத்துாஸ், 5.90 கோடி ரூபாய்க்கான சொத்து உத்தரவாதத்தை, ஆக., 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய, நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நேற்று, மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தயாரிப்பு நிறுவனம் தரப்பில், வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, ''நீதிமன்ற உத்தரவின்படி, நடிகர் ரவி மோகன் சொத்து உத்தரவாதத்தை தாக்கல் செய்யவில்லை என்பதால், அவரது சொத்துக்களை முடக்க உத்தரவிட வேண்டும்,'' என்றார். இந்த கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.