கலெக்டர் ஆபீசில் மக்கள் வழங்கிய மனு சின்னசேலத்தில் குப்பையில் கிடந்த அவலம்
கலெக்டர் ஆபீசில் மக்கள் வழங்கிய மனு சின்னசேலத்தில் குப்பையில் கிடந்த அவலம்
ADDED : நவ 10, 2024 08:42 AM
ஆத்துார்: சேலம் மாவட்டம், ஆத்துார், அரசநத்தத்தை சேர்ந்த காந்திமதி, சடையம்மாள், தென்னங்குடிபாளையத்தை சேர்ந்த, ஆத்துார் வட்டார காங்., செயலர் சுந்தரம் உள்ளிட்டோர், கடந்த, 4ல், சேலம் கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர் முகாமில், இலவச வீட்டுமனை பட்டா உட்பட கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.
அதன் மீது மனு எண் குறிப்பிட்டு, 'சீல்' வைத்து ஆத்துார் பி.டி.ஓ.,விற்கு பரிந்துரை செய்யப்பட்டது. பத்துக்கும் மேற்பட்ட மனுக்கள், கடந்த, 6ல், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள குப்பையில் கிடந்தன.
இதைப்பார்த்த, சின்னசேலத்தை சேர்ந்த வீராசாமி, மனுவில் உள்ள போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தார். தொடர்ந்து, அவற்றை தபால் மூலம் அனுப்பியுள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுக்கள், வேறு மாவட்டத்தில் உள்ள பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்தது கண்டு மனுதாரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையறிந்த சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, விசாரணை நடத்த உத்தரவிட்டார். ஆத்துார் தாசில்தார் பாலாஜி உட்பட வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.
அரசநத்தம், மஞ்சினி, தென்னங்குடிபாளையத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது:
கலெக்டரிடம் கொடுத்த மனுக்கள், ஆத்துார் பி.டி.ஓ.,விடம் இருக்க வேண்டும். சீல் வைத்த மனுக்கள், இரு நாளில் குப்பைக்கு சென்றது எப்படி என தெரியவில்லை. இதுதொடர்பாக, முதல்வருக்கு ஆன்லைனில் புகார் அளித்துள்ளோம்.
நவ., 11ல், சேலம் கலெக்டரிடம், குப்பையில் இருந்து மீட்கப்பட்ட மனுக்களை வழங்க உள்ளோம். குப்பையில் மனுவை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.
இவ்வாறு கூறினர்.
ஆத்துார் துணை பி.டி.ஓ., பரமசிவம் கூறுகையில், ''ஆத்துாரை சேர்ந்தவர்கள் அளித்த மனுக்கள், சின்னசேலம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கிடந்தது எப்படி என தெரியவில்லை. சீல் வைத்த மனுக்கள் வேறு மாவட்டத்தில் கிடந்தது குறித்து விசாரிக்கிறோம்,'' என்றார்.