திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
ADDED : பிப் 13, 2026 01:27 AM

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலுக்கு தடை விதிக்க கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல், வரும் 22ம் தேதி நடக்கிறது. தேர்தல் அதிகாரியாக, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், சட்ட விதிமுறைகளை மீறி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, தயாரிப்பாளர் கவுன்சில் உறுப்பினர்கள் சீனிவாசன் உள்ளிட்ட ஐந்து பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி பி.தனபால் விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில், 'சங்கத்தின் சட்ட விதிகளை மீறி, தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு, நான்கு நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது' என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தயாரிப்பாளர் கவுன்சில் தரப்பில், 'விதிகளுக்கு உட்பட்டே தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுக்குழு கூட்டம் உள்ளிட்ட கூட்டங்களில் பங்கேற்றபோது, எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தேர்தலில் போட்டியிட, மனுதாரர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
தேர்தல் அறிவிப்பு வெளியிடும் போது, எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், தேர்தல் நடைமுறை துவங்கிய பின், தடை கோரி வழக்கு தொடரப்பட்டு உள்ளதால், மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
கடந்த தேர்தலின் போது, தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், இம்முறையும் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு, தேர்தல் நடைமுறை துவங்கி உள்ளதால், மற்றொரு தேர்தல் அதிகாரியை நியமிப்பது முறையாகாது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

