ADDED : ஜூலை 19, 2024 10:28 AM

மேட்டுப்பாளையம்: பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் தொடர்ந்து 4வது நாளாக பில்லூர் அணை நிரம்பி வழிகிறது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா, பில்லூர் வனப்பகுதியில், 100 அடி உயரத்தில், பில்லூர் அணை கட்டப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு நலன் கருதி, 97 அடிக்கு நீர்மட்டம் உயரும் போது, அணை நிரம்பியதாக அறிவித்து, அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும், அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். கடந்த ஒரு வாரமாக பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், கடந்த, 16ம் தேதி பில்லூர் அணை நிரம்பியது.
தொடர்ந்து அணியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து, 15 ஆயிரம் அடிக்கு குறையாமல் வந்து கொண்டுள்ளது. ஏற்கனவே பில்லூர் அணை நிரம்பி உள்ளதால், அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும், அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடுகின்றனர். இதனால் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. நேற்று இரவு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான, அவலாஞ்சியில், 216 மி.மீ., மழையும், அப்பர் பவானியில், 120 மி.மீ., குந்தாவில், 42 மி.மீ., பரளியில் 11 மி.மீ., பில்லூர் அணையில், 7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 14 ஆயிரத்து 160 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் நான்காவது நாளாக பில்லூர் அணை நிரம்பி வழிகிறது. மேலும் பவானி ஆற்றிலும் நான்காவது நாளாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.