ADDED : ஜன 21, 2026 07:04 AM

சென்னை: ''கவர்னர் ரவி செய்தது அனைத்தும் திட்டமிட்ட நாடகம்,'' என, அமைச்சர் ரகுபதி கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய கவர்னர் ரவி, பா.ஜ., பிரதிநிதியாக வந்து சென்றுள் ளார். தமிழக சட்டசபையில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடுவதுதான் மரபு. இதை கடந்த மூன்றாண்டுகளாக சொல்லியும், கவர்னர் கேட்கவில்லை.
தமிழக அரசு கொடுத்த அறிக்கையை வாசிக்காமல், தானாக ஏதாவது சொல்லி, சட்டசபையிலேயே பிரச்னையை கிளப்ப முயன்றார். ஆனால், அனைவரும் அமைதியாக இருந்தனர். சபாநாயகர் கேட்டுக் கொண்டும், கவர்னர் ரவி உரையை வாசிக்கவில்லை.
கவர்னர் பேசும்போது, 'மைக்' அணைக்கப்பட்டதாக கூறுவது தவறு. அப்படி எதுவும் நடக்கவில்லை.
சட்டசபையில் இருந்து செ ன்றதும், தமிழக அரசு மீது குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் கூட கூறாத குற்றச்சாட்டுகளை, அ வர் கூறியுள்ளார்.
தமிழகம், 11.9 சதவீத பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளதாக, மத்திய அரசு சொல்கிறது. தொழில் வளர்ச்சி இல்லாமல் இந்த இரட்டை இலக்க வளர்ச்சி சாத்தியம் அல்ல. ஆனால், தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளதாக பொய் குற்றச்சாட்டை, கவர்னர் கூறுகிறார்.
சட்டசபையிலிருந்து வெளியே சென்ற 10 நிமிடங்களில், அரசை குறை கூறும் அறிக்கை வெளி வருகிறது. எல்லாம் திட்டமிட்ட நாடகம். கவர்னர் ரவி வெளியே சென்றதும், முதல்வர் ஸ்டாலின் வாசித்த அறிக்கை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.

