பிளாஸ்டிக் கலந்த கழிவுநீர் கடலில் கலப்பு: அரிய வகை உயிரினங்களுக்கு ஆபத்து
பிளாஸ்டிக் கலந்த கழிவுநீர் கடலில் கலப்பு: அரிய வகை உயிரினங்களுக்கு ஆபத்து
ADDED : நவ 20, 2025 12:15 AM
சென்னை: பிளாஸ்டிக் கலந்த கழிவுநீர் கடலில் கலப்பதால், அரிய வகை உயிரினங்கள் உள்ள மன்னார் வளைகுடா உயிர்கோள பகுதிக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை நகராட்சி உள்ளது. இது, மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது.
இந்நகராட்சி பகுதியிலிருந்து கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், ஆறு வாய்க்கால்கள் வழியே, மீனவர் குப்பம் என்ற கிராமம் அருகே கடலில் கலக்கிறது. இதனால், கடல் மாசடைகிறது.
சட்டப்படி குற்றம் இப்பகுதியில் எங்கும் இல்லாத அரிய வகை கடல் உயிரினங்களான கடல் பசு, கடல் குதிரை, ஆமை, சுறா, பவளப்பாறைகள் அதிகம் உள்ளன. இவற்றை பாதுகாக்க, அப்பகுதியை, 'மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம்' என தமிழக அரசு அறிவித்தது.
அப்பகுதியில் கழிவுநீர், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை கலந்தால், அந்த உயிரினங்களுக்கு ஆபத்து நேரிடும் என்பதால், இது போன்ற செயல்கள் நடப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறை எச்சரித்துள்ளது.
அதை மீறி, பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்த கழிவுநீரை, கீழக்கரை நகராட்சி நிர்வாகம் கடலில் கலந்து வருகிறது.
இதனால், அரிய வகை உயிரினங்கள் வாழும் மன்னார் வளைகுடா உயிர்கோள பகுதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என மீனவர் குப்பம், மங்களேஸ்வரி நகர், முத்துராஜ் நகர் உட்பட ஐந்து கிராமத்தினர் சேர்ந்து, கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
அதில் கூறியிருப்ப தாவது:
கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள கீழக்கரை நகராட்சியில் உள்ள அனைத்து கழிவுநீரும், ஆறு மற்றும் வாய்க்கால் வழியே கீழக்கரை கடற் பகுதியில் கலக்கிறது.
இதனால், மீன்கள், கடல் பாசிகள், கடல் பசு மற்றும் கடல் ஆமைகள் இறந்து வருகின்றன; சுற்றுச்சூழல் மாசடைந்து, கிராமங்களின் அனைத்து பகுதிகளிலும் துர்நாற்றம் வீசுகிறது.
தீர்மானம் தற்போது, கிராம குடியிருப்பு பகுதியில் புதிதாக கால்வாய் அமைத்து, கழிவுநீரை கடலில் கலக்க, கீழக்கரை நகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் வாய்க்கால் அமைத்தே தீருவோம் என்கிறது.
இப்பகுதியை, மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகமாக அரசு அறிவித்துள்ளது. எனவே, கழிவுநீர் கடலில் கலப்பதை தடை செய்ய வேண்டும். சேதுக்கரை முதல் ஏர்வாடி கடற்கரை வரை, 25 மீனவ கிராம மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இனியும் கழிவுநீர் கலந்தால், மக்கள் அனைவரும் நோய்வாய்ப்பட்டு சிரமப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், கடலில் கழிவுநீர் கலப்பதை தடை செய்ய வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

