மக்களின் உயிரோடு விளையாடுவதா? தி.மு.க., அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
மக்களின் உயிரோடு விளையாடுவதா? தி.மு.க., அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
ADDED : டிச 06, 2024 06:53 AM

சென்னை : சுகாதாரமான குடிநீர் வழங்கும் கடமையை செய்யாமல், மக்களின் உயிரோடு தி.மு.க., அரசு விளையாடுவதாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விஷயத்துக்காக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பா.ம.க., தலைவர் அன்புமணி உள்ளிட்டோரும் தமிழக அரசை கண்டித்துள்ளனர்.
பழனிசாமி:
தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டில், கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்திய மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
குடிநீர் என்பது மிக அடிப்படையான ஒன்று. அதை மிகவும் கவனத்துடன் வினியோகிக்க வேண்டியது அரசின் கடமை.
புயல் கரையை கடந்ததும், குடிநீர், கழிவுநீர் குழாய்கள் இடையே, எவ்வித கலப்பும் இன்றி முறையாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறதா என்பதை, அரசு உறுதி செய்திருக்க வேண்டும்.
மெத்தனப்போக்குடன் அதை செய்யாமல் விட்டு விட்டு, சுகாதாரமற்ற குடிநீரால் மக்கள் உயிரோடு அரசு விளையாடியிருக்கிறது.
தமிழகம் முழுதும் சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுவதை, முதல்வர் ஸ்டாலின் உறுதிப்படுத்த வேண்டும்.
அண்ணாமலை:
'குடிநீரில் கழிவுநீர் கலந்திருந்தால், 300 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பர்; ஆனால், 20 பேர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
'எனவே, மக்கள் மீது தான் தவறு இருக்கிறது' என, தாம்பரம் 13வது வார்டில் நடந்த உயிரிழப்பு பிரச்னைக்கு, திமிராக பதில் அளித்துஉள்ளார் அமைச்சர் அன்பரசன்.
குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என்றால் அமைச்சரும், தி.மு.க.,வினரும் அந்த பகுதியில் வழங்கப்படும் குடிநீரை குடிக்க முன்வருவரா?
எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என, மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதுமின்றி செயல்படுகிறது மக்கள் விரோத அரசு.
அன்புமணி:
மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்குக் கூட, பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க முடியாத நிலையில் தான் தமிழக அரசு செயல்படுகிறது.
மக்களின் அடிப்படை தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாத அளவுக்கு அரசு முடங்கிக் கிடப்பது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.