தாயார் படத்தை வைத்திருந்த சிறுமியை மேடையிலேயே உணர்ச்சி பொங்க பாராட்டிய பிரதமர் மோடி!
தாயார் படத்தை வைத்திருந்த சிறுமியை மேடையிலேயே உணர்ச்சி பொங்க பாராட்டிய பிரதமர் மோடி!
UPDATED : ஜன 23, 2026 08:08 PM
ADDED : ஜன 23, 2026 07:16 PM

மதுராந்தகம்: தேஜ கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தனது தாயார் படத்தை வைத்திருந்தபடி காத்திருந்த சிறுமிக்கு பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்தார்.
மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று (ஜன.23) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். தமிழகத்தில் திமுகவையும், திமுக அரசையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
அவரின் ஆவேசமான பேச்சைக் கேட்ட கூட்டத்தினர் ஆரவாரத்துடன் கைகளை தட்டியவாறு வரவேற்றுக் கொண்டிருந்தனர். அந்த கூட்டத்தில் சிறுமி ஒருவர் பிரதமர் மோடியின் தாயார் உருவப்படத்தை கைகளில் ஏந்தியபடி அனைவருக்கும் காட்டிக் கொண்டு இருந்தனர்.
மேடையில் இதை பேசியபடி இருந்த பிரதமர் மோடி, இந்த சிறுமியின் செயலை கண்ணுற்று மகிழ்ந்தார். அப்போது நெகிழ்ச்சியுடன் பிரதமர் பேசியதாவது;
நான் என் உரையை மேலும் தொடர்வதற்கு முன்பாக, நெடுநேரமாக அங்கே (கூட்டத்தை பார்த்து கைகாட்டுகிறார்) ஒரு சிறுமி என் தாயாரின் படம் என்று நினைக்கிறேன். அதை கையிலே ஏந்திக் கொண்டு எனக்கு தரவேண்டும் என்று துடித்துக் கொண்டு இருக்கிறார்.
மகளே..! உன்னுடைய பெயர் அதில் இருந்தால் போதும். இதை நான் பெற்றுக் கொண்டு உனக்கு எனது நல்லாசி கடித்தை கண்டிப்பாக அனுப்புகின்றேன். என்னுடைய பாதுகாப்பு அதிகாரிகள் அதை பெற்றுக் கொண்டு எனக்கு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி மகளே!
இவ்வாறு பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் பேசினார்.
இதைக் கண்ட கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர்.

