இசைப்பயணத்தில் மற்றொரு அத்தியாயம் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி புகழாரம்
இசைப்பயணத்தில் மற்றொரு அத்தியாயம் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி புகழாரம்
UPDATED : மார் 19, 2025 03:19 AM
ADDED : மார் 19, 2025 12:10 AM

'நம் இசை மற்றும் கலாசாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய இளையராஜா, சிம்பொனி இசையை இயற்றியது அவரது இசைப் பயணத்தில், மற்றொரு அத்தியாயத்தை குறிக்கிறது' என, பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரபல இசையமைப்பாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான இளையராஜா, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில், கடந்த, 8ம் தேதி, 'வேலியன்ட்' என்ற சிம்பொனியை அரங்கேற்றினார். இதன் வாயிலாக, மேற்கத்திய செவ்வியல் வடிவிலான சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை, இளையராஜா நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதுகுறித்து அவர், 'பிரதமர் மோடி உடனான சந்திப்பு, எனக்கு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது. என் சிம்பொனி வேலியன்ட் உட்பட பல விஷயங்கள் பற்றி நாங்கள் பேசினோம். பிரதமரின் பாராட்டையும், ஆதரவையும் நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்' என, குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, பிரதமர் மோடியும், இளையராஜாவுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
ராஜ்யசபா எம்.பி., இளையராஜாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. இசைஞானியான அவரது மேதமை, நம் இசை மற்றும் கலாசாராத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்திலும் முன்னோடியாக திகழும் இளையராஜா, சமீபத்தில் லண்டனில் தன் சிம்பொனியான வேலியன்டை வழங்கி, மீண்டும் வரலாறு படைத்துள்ளார். இந்த நிகழ்ச்சி, உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நடத்தப்பட்டது.
இந்த முக்கியமான சாதனை, அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தை குறிக்கிறது.- உலகளவில் தொடர்ந்து மேன்மையுடன் இளையராஜா விளங்குவதை இது எடுத்துக் காட்டுகிறது.
இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.
- நமது டில்லி நிருபர் -