டங்ஸ்டன் பிரச்னையில் விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தது பிரதமர் மோடி தான் பா.ஜ., மாநில செயலாளர் ராம சீனிவாசன் பேட்டி
டங்ஸ்டன் பிரச்னையில் விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தது பிரதமர் மோடி தான் பா.ஜ., மாநில செயலாளர் ராம சீனிவாசன் பேட்டி
ADDED : ஜன 25, 2025 04:55 AM
அவனியாபுரம் : ''டங்ஸ்டன் பிரச்னையில் விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தது பிரதமர் மோடி தான்,'' என, மதுரை விமான நிலையத்தில் பா.ஜ., மாநில செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்தார்.
டங்ஸ்டன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ராம சீனிவாசனுடன், மேலுார் விவசாயிகள் ஏழு பேர் சில நாட்களுக்கு முன் டில்லி சென்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தனர். அவர்கள் நேற்று மதுரை திரும்பினர்.
விமான நிலையத்தில் ராம சீனிவாசன் கூறியதாவது: டங்ஸ்டன் பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது. மத்திய அமைச்சர் மூலமாக டங்ஸ்டன் சுரங்கத்திற்கு கொடுத்த அனுமதி ஏலம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
எந்தெந்த மாநிலங்களில் கனிம வளங்கள் உள்ளது என நாடு முழுவதும் ஜியாலஜிக்கல் நிறுவனம் ஆய்வு செய்கிறது. டங்ஸ்டன் அரிய வகை தாது பொருள். அதை தற்போது வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் இருப்பதால் தான் தமிழக அரசிடம் பேசி ஏலம் விட தயாரான போது மாநில அரசு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. விவசாயிகளுடன் கலந்தாலோசித்த பின்பு தான் பாதிப்புகள் தெரிய வந்தது. மக்கள் தெரிவித்த கருத்துக்களை மத்திய அமைச்சர் ஏற்று விவசாயிகளுக்கு ஆதரவாக பிரதமரிடம் பேசி டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்துள்ளார்.
திட்டத்தை ரத்து செய்ய ஒத்துழைப்பு கொடுத்த மத்திய அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடிக்கு நன்றி.
தமிழக அரசின் நடவடிக்கையால் தான் மத்திய அரசு பணிந்து இத்திட்டத்தை ரத்து செய்தது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திட்டத்தை ரத்து செய்ய அனைத்து கட்சியினரும் போராடினர். இந்த விஷயத்தை அரசியலாக இப்போது விரும்பவில்லை என்றார்.
பிரதமர் மோடிக்கு நன்றி
விவசாயிகள் மகாமுனி, ஆனந்த் கூறுகையில், 'மேலுார் பகுதி மக்கள் 2 மாதங்களாக கவலையுடன் இருந்தனர். மிகப்பெரிய சவால் இருந்தது. மதுரைக்கு நடை பயணம் மேற் கொண்டோம்.
போராட்டத்தின் விளைவாக மிகப்பெரிய வெற்றி பரிசு கிடைத்திருக்கிறது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை டங்ஸ்டன் திட்டம் வராது என உறுதி அளித்திருந்தார். டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சருக்கும் பா.ஜ., நிர்வாகிகளுக்கும் கிராமத்தின் சார்பில் நன்றி,' என்றனர்.

