அன்புமணி பயணம் திட்டமிட்டபடி தொடரும்; டி.ஜி.பி. அலுவலகம் விளக்கம்
அன்புமணி பயணம் திட்டமிட்டபடி தொடரும்; டி.ஜி.பி. அலுவலகம் விளக்கம்
ADDED : ஜூலை 26, 2025 08:48 AM

சென்னை: பாமக தலைவர் அன்புமணியின் பயணம் திட்டமிட்டபடி தொடரும் என்று டி.ஜி.பி., அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் தமது 100 நாட்கள் நடைபயணத்தை திருப்போரூரில் இருந்து பாமக தலைவர் அன்புமணி தொடங்கி உள்ளார். தமிழகத்தின் முக்கிய தொகுதிகள் வழியாக பயணிக்கும் அவர், நவ.1ம் தேதி தர்மபுரியில் பயணத்தை நிறைவு செய்கிறார்.
நடைபயணத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும், எனவே தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் டி.ஜி.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் பின்னர், ராமதாஸ் அளித்துள்ள கடிதத்தின் பேரில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு டி.ஜி.பி., தரப்பில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது.
ஆனால் அன்புமணி நடைபயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் எழுந்தன. இந் நிலையில், அன்புமணியின் பயணம் திட்டமிட்டபடி தொடரும் என்று டி.ஜி.பி., அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த விவரத்தை வக்கீல் கே. பாலு வெளியிட்டு உள்ளார்.
போலீஸ் எஸ்.பி.,க்கள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவதற்காகவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
அன்புமணியின் நடைபயணம் திட்டமிட்டபடி தொடரும். நடைபயணத்திற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமில்லை என்றார்.