பா.ம.க., போராட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கு: ஐகோர்ட் கேள்வி
பா.ம.க., போராட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கு: ஐகோர்ட் கேள்வி
ADDED : ஜன 02, 2025 11:36 AM

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்? என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பா.ம.க., மகளிரணி சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும், தடையை மீறி பா.ம.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சவுமியா உள்பட பா.ம.க.,வினரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக, பாமக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பா.ம.க., வக்கீல் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிபதி வேல்முருகன், போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததுடன், கடுமையான கருத்துக்களையும் முன்வைத்தார்.
அவர் கூறியதாவது: பா.ம.க., போராட்டத்தை அனுமதிக்க உத்தரவிட முடியாது. அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்? வெறும் விளம்பரத்துக்காக போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள். சமூகத்தில் ஆண், பெண் என பாகுபாடு இருப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம், எனக் காட்டமாக கூறினார்.