சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.,க்களும் பெண்களாக இருக்க வேண்டும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆசை
சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.,க்களும் பெண்களாக இருக்க வேண்டும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆசை
ADDED : மார் 08, 2026 06:10 AM

திண்டிவனம்: 'தமிழக சட்டசபை உறுப்பினர்கள் 234 பேரும் பெண்களாக இருக்க வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில், நேற்று மகளிர் தின விழா நடந்தது.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, மாநில மகளிர் அணி தலைவர் சுஜாதா உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில், கலை நிகழ்ச்சிகள், மகளிர் பங்கேற்ற கராத்தே போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில், ராமதாஸ் பேசுகையில், “மகளிர் நாட்டை ஆள வேண்டும்; மகளிரை இழிவுபடுத்திய காலம் போய், மகளிர் மேம்பாட்டுக்காக, மகளிரே திட்டங்களை தீட்டும் காலம் வரவேண்டும்.
“தமிழகத்தில், சட்டசபை உறுப்பினர்கள் 234 பேரும் பெண்களாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை.
“அது நடக்குமா, சாத்தியமா, ஆண்கள் விடுவார்களா, சட்டம் இடம் கொடுக்குமா என்ற பல்வேறு கேள்விக்குறிகளுக்கு மத்தியில்தான் மகளிர் சமூகம் வாழ்ந்து வருகிறது. மகளிர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்'' என்றார்.
இதையடுத்து, பேட்டியளித்த அவர், “பா.ம.க., கூட்டணி தொடர்பாக, ஒன்றிரண்டு நாட்களில் தெரியவரும். நாளை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், கட்சி தொடர்பான வழக்கு விசாரணையில், நல்ல தீர்ப்பு வரும்” என, தெரிவித்தார்.

