பா.ம.க., தலைவர் அன்புமணி பதவி பறிப்பு : ராமதாஸ் அதிரடி
பா.ம.க., தலைவர் அன்புமணி பதவி பறிப்பு : ராமதாஸ் அதிரடி
UPDATED : ஏப் 11, 2025 07:28 AM
ADDED : ஏப் 10, 2025 11:26 PM

சென்னை: மகன் அன்புமணியிடம் இருந்த தலைவர் பதவியை பறித்து, அவரை அதிகாரம் இல்லாத செயல் தலைவராக நியமித்து, பா.ம.க.,வில் அதிரடி ஆட்டம் ஆடியுள்ளார் ராமதாஸ். ''இனி நானே நிறுவனர்; நானே தலைவர்,'' என்றும் அவர் அறிவித்துள்ளார்.
திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் நேற்று ராமதாஸ் அளித்த பேட்டி:
சமுதாயத்தைப் பீடித்த அறியாமை நோயை தீர்க்கும் மாமருந்து அரசியல் அதிகாரம் என்பதை உணர்ந்து, 1989ல் பா.ம.க.,வை துவக்கினேன். தமிழகத்தில் என் கால் தடம் படாத கிராமங்களே இல்லை என்கிற அளவுக்கு பயணித்து, கட்சியை கட்டமைத்தேன். தமிழகம் மட்டுமல்லாது, இந்திய அளவில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தினேன். பாளையங்கோட்டை தவிர, மற்ற அனைத்து மத்திய சிறைகளிலும் கொடுமைகளை அனுபவித்து, இந்த இயக்கத்தை நடத்தி வருகிறேன்.
திருச்சியில் கைவிடப்பட்ட சிறையில் அடைக்கப்பட்ட பின், மறு பிறவி எடுத்து வந்தேன். நான் பார்லிமென்டிற்கோ, சட்டசபைக்கோ செல்ல ஆசைப்பட்டதில்லை. இனியும் வாழ்நாள் முழுதும் ஆசைப்பட போவதில்லை. லட்சோப லட்சம் பாட்டாளி மக்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறேன். இதை விட பெரிய பதவி வேறு எதுவும் இல்லை. தினமும் நுாற்றுக்கணக்கான பாட்டாளி சொந்தங்களும், பொது மக்களும் என்னை சந்திக்கின்றனர்.
கடந்த, 1989ம் ஆண்டு துவக்கத்தில் இருந்த, என் செயல்பாடுகளை பார்த்தது இல்லை என்றும், என் தலைமையின் கீழ் சிறிது காலம் பணியாற்ற வேண்டும் என்றும், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தின் புதிய தலைமுறையினர் அன்பு கட்டளையிட்டனர். அவர்களின் இந்த ஆசையை நிறைவேற்றவும், வரும், 2026 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டும், பல்வேறு செயல் திட்டங்களை வகுத்துள்ளேன். அதன்படி, பா.ம.க., நிறுவனராகிய நான், இனி தலைவர் பொறுப்பையும் எடுத்துக் கொள்கிறேன்.
தேர்தல் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பா.ம.க., தலைவராக இருக்கும் அன்புமணியை, கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன். அதை ஏற்று, பா.ம.க.,வினர் ஒன்றுபட்ட உணர்வோடு தீவிரமாக செயல்பட்டு, தேர்தல் வெற்றிக்கு பணியாற்ற வேண்டும். வரும் மே, 11ல் மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு, இதுவரை கண்டிராத வகையில் வெற்றிகரமாக நடக்க, மாநாட்டு குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அன்புமணியுடன் இணைந்து உழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., கூட்டணி தொடருமா?
எனது முடிவுக்கு காரணங்கள் பல உண்டு. அதை இப்போது வெளிப்படையாக சொல்ல முடியாது. சிறுக சிறுக பகிர்ந்து கொள்ளலாம். பா.ம.க., நிர்வாக குழு, செயற்குழு, மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவருடனும் ஆலோசித்து, பா.ஜ., கூட்டணி குறித்து முடிவெடுப்போம்.
- ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,