ராமதாஸ் - அன்புமணி இடையே ஒற்றுமை ஏற்பட வேண்டி மங்கள ஆதித்ய யாகம் நடத்திய பா.ம.க.,வினர்
ராமதாஸ் - அன்புமணி இடையே ஒற்றுமை ஏற்பட வேண்டி மங்கள ஆதித்ய யாகம் நடத்திய பா.ம.க.,வினர்
ADDED : ஜூன் 09, 2025 05:22 PM

தஞ்சாவூர்: ராமதாஸ் - அன்புமணி இடையே ஒற்றுமை ஏற்பட வேண்டி பா.ம.க.,வினர், மங்கள ஆதித்ய பா.ம.க.,வினர் நடத்தினர்.
தமிழக அரசியலில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சியின் செயல் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் பெரும் பேசுப் பொருளாக உள்ளது. இந்நிலையில் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் பா.ஜ., இறங்கியுள்ளது.
இதையடுத்து ராமதாஸ், அன்புமணி மோதல் விவகாரம் கட்சியில் உள்ள தொண்டர்கள்,நிர்வாகிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸ், அன்புமணி இருவரும் இணைய வேண்டும் என கட்சியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூர், வடக்கு மாவட்ட பா.ம.க., செயலாளரும், ஆடுதுறை பேரூராட்சி சேர்மனுமான ஸ்டாலின் தலைமையிலான கட்சியினர், ராமதாஸ், அன்புமணி இருவருக்கும் இடையே ஒற்றுமை ஏற்பட என நவகிரக கோவில்களில் ஒன்றான சூரியனார்கோவிலில் அமைந்துள்ள சிவசூரியபெருமான் கோவிலில் மங்கள ஆதித்ய மகா யாகம் நடத்தினர். பிறகு, கோவிலில் உள்ள மகா மண்டபத்தில் மூன்று புனித நீர் கொண்ட கலசங்கள் வைக்கப்பட்டு, நுாற்றுக்கும் மேற்பட்ட மூலிகை பொருட்களை கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
புனித நீர் கொண்ட கலசங்கள் கோவிலில் மங்கல வாத்தியங்கள் முழங்க பிரகார வலம் வந்து உள்ள மூலவர் சிவசூர்யபெருமான் உள்ளிட்ட நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மகாஆர்த்தி செய்யப்பட்டது.
இது குறித்து ஸ்டாலின் கூறியதாவது: ஆதித்ய ஹோமம் என்பது சவால்களை வெல்லலாம் மற்றும் சூரிய கடவுளின் கதிரியக்க சக்திகளால் வழிநடத்தப்பட்டு ஆன்மீக விடுதலை நிலையை அடையலாம் என்பது ஐதீகம். இதனால், ராமதாஸ், அன்புமணி இருவருக்கும் இடையே சுமூக நிலை ஏற்படவும், தமிழகத்தில் பா.ம.க., வலுபெற்று தேர்தலில் வெற்றியடைய வேண்டியும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இது மிகபெரிய மாற்றத்தை தரும் என்ற நம்பிக்கை கட்சியினருக்கு மத்தியில் உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

