ஆசிரியர் கைது
நாகூர்: நாகை அடுத்த நாகூரில், அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாதவன், 44, என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினார்.
இவர், அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இது குறித்து மாணவி அளித்த புகாரின்படி, நாகை மகளிர் போலீசார், 'போக்சோ'வில் மாதவனை கைது செய்தனர்.
தற்காலிக ஆசிரியர் சிக்கினார்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம், 35; மாற்றுத்திறனாளி. இவர், கிருஷ்ணகிரி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியர்.
அப்பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவியர், செல்வம் தங்களிடம் தவறாக நடந்ததாக தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் புகாரின்படி, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார், செல்வத்தை போக்சோவில் கைது செய்தனர்.
கூலி தொழிலாளிக்கு 'காப்பு'
வேலுார்: வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா, 40. இவரது வீட்டின் எதிரே உள்ள அவரது நண்பரின், 15 வயது மகளுக்கு திருமண ஆசை காட்டி கர்ப்பமாக்கினார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் ராஜாவை கைது செய்தனர்.
பிரசவித்த சிறுமியின் கணவர் கைது
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கண்ணுார் பாப்பினச்சேரி பகுதியில் சேலம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த தம்பதி வசித்து வந்தனர். கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண்ணுக்கு கண்ணுார் அரசு மருத்துவ மனையில் நேற்று குழந்தை பிறந்தது.
ஆதாரங்களை சரிபார்த்ததில் அவருக்கு 17 வயது என தெரிந்தது. கண்ணுார் வலப்பட்டணம் போலீசார், அந்த சிறுமியின் கணவரை போக்சோவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 27; எம்.பி.ஏ., பட்டதாரி. அதே பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கினார். சிறுமிக்கு பெண் குழந்தை இறந்து பிறந்தது.
இது குறித்து, பெரம்பலுார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு புகாரின்படி, பெரம்பலுார் போலீசார், சுரேஷ் குமாரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரம்பலுார் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில், சுரேஷ்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

