ADDED : மார் 19, 2026 06:05 AM
சிறுமியுடன் வாழ்ந்தவர் சிக்கினார்:
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், அகரபொதக்குடியை சேர்ந்தவர் செல்வம், 20; வெல்டர். இவர், அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியை, 2025 செப்டம்பரில் திருமணம் செய்துள்ளார். இதையறிந்த, சமூகநல விரிவாக்கத்துறை அலுவலர், போலீசில் புகார் அளித்தார். திருவாரூர் அனைத்து மகளிர் போலீசார், செல்வம் மீது, போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர். அதுபோல, மன்னார்குடி அருகே, சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய வாலிபர் பிரதீபன், 28, என்பவர் மீது 'போக்சோ'வில் வழக்கு பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
பாலியல் தொல்லை; தாய் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை சேர்ந்த, 24 வயது இளம்பெண்ணும், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துாரை சேர்ந்த, 28 வயது வாலிபரும், காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு, இரண்டரை வயதில் பெண் குழந்தை இருந்தது. 2025 டிச., 11, குழந்தை, மர்மமான முறையில் இறந்தது. குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக, அஞ்செட்டி போலீசில், குழந்தையின் தந்தை புகார் செய்தார்.
விசாரணையில், கோம்மைகாடு, தி.மு.க., இளைஞரணி கிளை செயலராக இருந்த பெரியநாயகம், 40, என்பவர், குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. அவரை, பிப்ரவரியில், போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பாலியல் தொல்லைக்கு குழந்தை ஆளான குற்றத்தை மறைத்து, பெரியநாயகத்திற்கு உடந்தையாக இருந்ததாக கூறி, குழந்தையின் தாயை, அஞ்செட்டி போலீசார் நேற்று முன்தினம் இரவு, போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
பள்ளி ஆசிரியர் கைது
கரூர்: கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கடவூர் ஊராட்சி ஒன்றியம், வரவணை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 1 முதல் 3ம் வகுப்பு வரை மணப்பாறை பகுதியை சேர்ந்த ஆசிரியர் முருகன், 45, பாடம் நடத்தினார்.
இவர் பள்ளி சிறுமியரை, தகாத இடங்களில் தொட்டு பேசி வருவதாகவும், பாலியல் தொந்தரவு அளிப்பதாகவும் பெற்றோரிடம் சிறுமியர் தெரிவித்தனர்.
விசாரித்த, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் திலகவதி புகாரின்படி, குளித்தலை மகளிர் போலீசார், ஆசிரியர் முருகனை நேற்று போக்சோவில் கைது செய்தனர்.
துாத்துக்குடி: அதுபோல, தெருவில் விளையாடி கொண்டிருந்த, 4 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த மாற்றுத்திறனாளி பாலசுப்பிரமணியன், 45, என்பவரை, துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
