புதிய தமிழகம் பேரணிக்கு அனுமதி மறுப்பு காவல் துறை பதிலளிக்க உத்தரவு
புதிய தமிழகம் பேரணிக்கு அனுமதி மறுப்பு காவல் துறை பதிலளிக்க உத்தரவு
ADDED : ஜன 08, 2025 07:27 PM
சென்னை:புதிய தமிழகம் கட்சி பேரணிக்கு, முந்தைய நாள் அனுமதி மறுத்தது தொடர்பாக, காவல் துறை விளக்கம் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனு:
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட, ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த நவ., 7ல், சென்னை மன்றோ சிலையில் இருந்து, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை, பேரணி நடத்த அனுமதி கேட்டு, புதிய தமிழகம் சார்பில், மாநகர காவல் ஆணையரிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
அக்டோபரில் விண்ணப்பம் அளித்த நிலையில், 'குறிப்பிட்ட வழித்தடத்தில் பேரணிக்கு அனுமதியில்லை. எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இருந்து பேரணி நடத்துங்கள்' என, போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி, நவ., 7ல் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணியாக சென்று, கவர்னரை சந்தித்து மனு அளிக்க முடிவு செயயப்பட்டது.
இந்நிலையில், முந்தைய நாளான நவ., 6ல் பேரணிக்கு அனுமதி மறுத்து, போலீசார் உத்தரவு பிறப்பித்தனர். இதை பிறப்பித்த அதிகாரிக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசாரின் செயலால், கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில், 'மூன்று வாரங்களுக்கு முன், பேரணிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தோம். கவர்னரின் நேரத்தை பெற்றிருந்தோம். கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது, சட்ட விரோதமானது. பேரணியில் பங்கேற்க, நெல்லை, துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த கட்சியினரை, போலீசார் மழை என்றும் பார்க்காமல் கைது செய்து, மண்டபங்களில் அடைத்தனர்' என வாதிடப்பட்டது. 'மனுவுக்கு பதில் அளிக்க, அவகாசம் வழங்க வேண்டும்' என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, 'கடைசி நேரத்தில் பேரணிக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டால் என்ன அர்த்தம். போலீசார் அரசியல் ஏஜென்சி அல்ல; அரசு ஏஜென்சி; பேரணிக்கு அனுமதி அளிப்பதோ, மறுப்பதோ வேறு விஷயம். அதை உரிய காலத்திற்கு முன்பே தெரிவித்திருக்க வேண்டும்' எனக் கூறிய நீதிபதி, மனுவுக்கு பதில் அளிக்க, காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.