மதுரை ஆதீனத்தின் முன்ஜாமின் ரத்து செய்யக்கோரி போலீஸ் மனு
மதுரை ஆதீனத்தின் முன்ஜாமின் ரத்து செய்யக்கோரி போலீஸ் மனு
ADDED : ஜூலை 24, 2025 01:00 AM

சென்னை:விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதால், மதுரை ஆதீனத்தின் முன்ஜாமினை ரத்து செய்ய கோரி காவல் துறை தாக்கல் செய்த மனுவுக்கு, ஆதீனம் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை காட்டாங்கொளத்துாரில் நடந்த சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்ள, மே மாதம் மதுரை ஆதீனம் காரில் வந்து கொண்டிருந்தார். உளுந்துார்பேட்டை,- சேலம் ரவுண்டானா பகுதியில், மதுரை ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார் மோதியது.
புகார் இது குறித்து மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், 'என்னை கொலை செய்ய சதி நடந்துள்ளது; பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம்' என, கூறியிருந்தார்.
இரு மதத்தினருக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையில், மதுரை ஆதீனம் பொய்யான தகவலை பரப்பியதாக கூறி, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன், சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
இந்த வழக்கில் ஆதீனத்திற்கு முன்ஜாமின் வழங்கி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மதுரை ஆதீனத்தின் வயதை கருத்தில் கொண்டு, விசாரனை அதிகாரி நேரில் சென்று, அவரிடம் விசாரணை செய்ய அறிவுறுத்தியது.
உத்தரவு ஆதீனத்திடம் விசாரணை செய்யும்போது, அவரது ஆதரவாளர்கள் ஒத்துழைக்காமல் இருந்ததாகவும், விசாரணைக்கு ஆதீனமும் ஒத்துழைக்கவில்லை என்று கூறி, அவரது முன்ஜாமினை ரத்து செய்யுமாறு, சென்னை உயர் நீதிமன்றத்தில், காவல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு, மதுரை ஆதீனம் வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.