காணாமல் போன மாணவி 24 மணி நேரத்தில் ஆஜர்படுத்திய போலீஸ்
காணாமல் போன மாணவி 24 மணி நேரத்தில் ஆஜர்படுத்திய போலீஸ்
ADDED : பிப் 19, 2026 01:39 AM

சென்னை: கடலுாரில் காணாமல் போன மின்வாரிய அதிகாரியின் மகளை, 24 மணி நேரத்தில் மீட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று, போலீசார் ஆஜர்படுத்தினர்.
கடலுார் மாவட்டம், கார்கூடல் கிராமத்தைச் சேர்ந்த மின் வாரிய அதிகாரியின், 17 வயது மகள், கடந்த மாதம் காணாமல் போனார்.
கல்லுாரி சென்ற அவர், வீடு திரும்பாததால், அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி, தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு, 'யாரோ ஒருவரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு மைனர் பெண், அந்த ஆணுடன் சம்மதத்துடன் சென்று உள்ளார் என்பதற்காக, புகாரையோ அல்லது வழக்கையோ போலீசார் கைவிட முடியுமா' என கேள்வி எழுப்பிஇருந்தனர்.
மேலும், காணாமல் போன மாணவியை, 48 மணி நேரத்துக்குள் கண்டு பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, போலீசுக்கு கெடு விதித்தனர். இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல் துறை தரப்பில், மாணவியை அழைத்துச் சென்ற 27 வயது நபருக்கு எதிராக, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. மேலும், மீட்கப்பட்ட மாணவியையும், நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தினர்.
அப்போது மாணவியை அருகில் அழைத்து, படிப்பில் கவனம் செலுத்தும்படி, நீதிபதிகள் அறிவுரை கூறினர்.
பின், தன் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக மாணவி தெரிவித்ததை பதிவு செய்து, வழக்கை முடித்து வைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

