குதிரை தாலி கிழங்கில் போதை ஆய்வுக்கு அனுப்புகிறது போலீஸ்
குதிரை தாலி கிழங்கில் போதை ஆய்வுக்கு அனுப்புகிறது போலீஸ்
ADDED : ஜன 09, 2025 06:57 AM

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கவுஞ்சி சுற்று பகுதிகளில் விளையும் குதிரை தாலி  கிழங்குகளை  முகர்ந்தாலே போதை ஏறுவதாக வீடியோ வைரலானது. கிழங்கில் போதை தன்மை உள்ளதா என மது விலக்கு போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.
கொடைக்கானல் கவுஞ்சி, பூண்டி உள்ளிட்ட  பகுதிகளில் குதிரை தாலி கிழங்கு வேலியோரங்களில் விளைகிறது. மூலிகை பயன்பாட்டிற்கு  சிலர் இவற்றை பறித்து செல்வர். பூண்டியை சேர்ந்த ராஜா என்பவர் இந்த கிழங்குகளை நசுக்கி மூக்கில் வைத்து நுகர்ந்தால் போதையை  ஏற்படுத்துவதாக கூறி சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்துள்ளார். கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் சிலர் குதிரை தாலி கிழங்கை நுகர்ந்து பார்த்து போதை தலைக்கேறியது போல் சைகை காட்டி வீடியோ பதிவு செய்து வெளியிட்டனர்.
இதைப்பார்த்த பலர் ராஜாவை தேடி பூண்டி வர தொடங்கினர். இந்த விவகாரம் மதுவிலக்கு போலீசாருக்கு தெரிய அவர்கள் ராஜாவை அழைத்து எச்சரித்தனர்.
மேலும் கிழங்கில் போதை தன்மை உள்ளதா என சென்னை  ஆய்வகத்திற்கு அனுப்பி  ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

