த.வெ.க., மாநாட்டிற்கு அனுமதி வழங்காமல் காவல் துறை மவுனம்; நிர்வாகிகள் அதிருப்தி
த.வெ.க., மாநாட்டிற்கு அனுமதி வழங்காமல் காவல் துறை மவுனம்; நிர்வாகிகள் அதிருப்தி
ADDED : செப் 26, 2024 03:08 AM
விக்கிரவாண்டி:தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கி உள்ள நடிகர் விஜய், விக்கிரவாண்டி அருகே வி.சாலை என்ற இடத்தில் அக்., 27ம் தேதி கட்சியின் முதல் மாநாடு நடைபெறும் என அறிவித்தார்.
தொடர்ந்து, மாநாடு நடத்த அனுமதி கோரி, செப்.21ம் தேதி த.வெ.க., பொதுச் செயலர் புஸ்சி ஆனந்த், விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி., திருமாலிடம் மனு அளித்தார். மனு அளித்து நான்கு நாட்களாகியும் போலீசார் அனுமதி அளிக்காமல், மவுனம் காத்து வருகின்றனர்.
இதனிடையே, மாநாடு நடத்துவதற்கு, ஏற்கனவே காவல் துறை விதித்த, 31 நிபந்தனைகளுக்கு உட்பட்ட பணிகளை, கட்சி நிர்வாகிகள் செய்து முடித்துள்ளனர்.
மாநாடு நடைபெறும் இடத்தில், இன்று பூஜை போட்டு பணியை துவக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், இதுவரை போலீசார் அனுமதி தராதது, நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாநாடு தொடர்பாக உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாகவும், அங்கிருந்து பச்சைக்கொடி காட்டினால் உடனே அனுமதி வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிகிறது.
மாநாட்டுக்கு பாதுகாப்பு அளிப்பதில் பிரச்னை இல்லை. மாநாடு நடைபெறும் இடம் நெடுஞ்சாலைக்கு மிக அருகாமையில் உள்ளதால், போக்குவரத்தை சமாளிப்பது தான், முக்கிய பிரச்னையாக இருக்கும் என போலீசார் கருதுகின்றனர்.
அக்டோபர் 30ம் தேதி தேவர் ஜெயந்தி, அக்., 31ம் தேதி தீபாவளி பண்டிகை. இந்த இரு நிகழ்ச்சிகளின் காரணமாக, சாலையில் போக்குவரத்து அதிமாக இருக்கும் என்பதாலும், மாநாட்டிற்கு அதிகளவு கூட்டம் வரும் என்பதாலும், மாநாடு நடைபெற அனுமதி வழங்குவது குறித்து, காவல்துறை உயர் அதிகாரிகள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

