தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஊர்க்காவல் படை வீரர்களுக்கு போலீஸ் ஸ்டேஷனில் பணி

ஊர்க்காவல் படை வீரர்களுக்கு போலீஸ் ஸ்டேஷனில் பணி

ஊர்க்காவல் படை வீரர்களுக்கு போலீஸ் ஸ்டேஷனில் பணி


ADDED : மார் 04, 2013 11:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2013 11:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக ஊர்க்காவல் படையில் பணியாற்றுபவர்களை, போலீசில் பற்றாக்குறையாக உள்ள டிரைவர் பணியிடம், வாரன்ட் வினியோகம், தனிநபர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்திக் கொள்ள, மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும், எஸ்.பி.,க்களுக்கு, ஊர்க்காவல் படை, ஏ.டி.ஜி.பி., முத்துக்கருப்பன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக போலீசாருக்கு உதவுவதற்காக, மாநகர், மாவட்டத்தின் முக்கிய நகரங்களில், ஊர்க்காவல் படை செயல்படுகிறது. தமிழகம் முழுவதும், ஊர்க்காவல் படை வீரர்களின் எண்ணிக்கை, 14, 250 ஆக, இருந்தது, தற்போது,16,145 ஆக, உயர்த்தப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு:

கடந்த ஆண்டு வரை, ஊர்க்காவல் படை வீரர்களுக்கான, ஒருநாள் சம்பளம், 65 ரூபாய்; சலவை அலவன்ஸ், இரண்டு ரூபாய் சேர்த்து, 67 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, இது,152 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஊர்க்காவல் படையில் உள்ளவர்களுக்கு, ஆண்டுக்கு, 200 நாள் மட்டும் பணி வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும், போக்குவரத்தை சரி செய்தல், திருவிழா, பண்டிகை நேரங்களில் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில், கூட்டத்தை ஒழுங்கு படுத்துதல், தலைவர்கள் வருகையின் போதும், அரசியல் கட்சிகள், சங்கங்களின் பொதுக்கூட்டம், சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் நேரங்களில், பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில், தமிழக போலீசில், 19,866 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பணி மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையில், நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர். இந்தக் குறையை சரி செய்யும் வகையில், தற்போது, 12,208 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. அவர்கள் பயிற்சியை முடித்து பணிக்கு வர, இன்னும் எட்டு மாதம் உள்ளது.ஆனால், இந்த கால கட்டத்துக்குள், பணி ஓய்வு, விருப்ப ஓய்வு, இயற்கை எய்துபவர் என, காலி பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், போலீசில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, 25 ஆயிரத்தை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பற்றாக்குறை அதிகரிப்பு:

அதே நேரத்தில் போலீசாருக்கு, உதவுவதற்காக, அறிவிக்கப்பட்டுள்ள இளைஞர் படைக்கான ஆள் தேர்வு இன்னும் துவங்கவில்லை. இதன் காரணமாக, பல மாநகர, மாவட்ட போலீசில் பற்றாக்குறை அதிகரிப்பதால், போலீசாரின் பணி அதிகரித்து வருகிறது. இதில், சில நேரங்களில் மாநகர ஆயுதப்படை, அதிகாரிகளின் வாகனங்களை இயக்கவும், நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் வாரன்டுகளை வழங்க முடியாமல் போலீசார் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்த குறைகளையும், அதற்கான தற்காலிகமாக தீர்வு காணும் வகையில், போலீசார் மேற்கொள்ளும் பணிகளை, ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இனி போலீசில் டிரைவர் பற்றாக்குறை நிலவும் பட்சத்தில், உடனடியாக, ஊர்க்காவல் படையின் ஏரியா கமாண்டர், எஸ்.ஐ., அந்தஸ்திலான அதிகாரிகளின் ஒப்புதலுடன், ஊர்காவல் படையில் டிரைவிங் லைசன்ஸ் உள்ளவர்களை, டிரைவராக பயன் படுத்திக் கொள்ளலாம். அது மட்டுமின்றி, போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து வாரன்ட் வழங்குதல், தனிநபர் பாதுகாப்புக்கும் ஊர்க்காவல் படையினரை, பயன் படுத்திக் கொள்ள, ஊர்க்காவல் படை, ஏ.டி.ஜி.பி., முத்துக்கருப்பன் அனுமதி அளித்துள்ளார்.

இது பற்றிய சுற்றறிக்கை, அனைத்து மாவட்ட எஸ்.பி.,க்கள், மாநகர கமிஷனர், துணை கமிஷனர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து, ஊர்க்காவல் படையில் பணியில் உள்ள வீரர்களில், டிரைவிங் லைசன்ஸ் பெற்றுள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகம் முழுவதும் உள்ள, 16,145 பேரில், 20 சதவீதத்தினர், அதாவது, 3,335 பேர் டிரைவர் லைசன்ஸ் வைத்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இனி, இவர்கள் போலீசின் வாகனங்களை இயக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அரசின் இந்த அறிவிப்பு, ஊர்க்காவல் படை வீரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us