ADDED : மார் 04, 2013 11:18 PM

தமிழக ஊர்க்காவல் படையில் பணியாற்றுபவர்களை, போலீசில் பற்றாக்குறையாக உள்ள டிரைவர் பணியிடம், வாரன்ட் வினியோகம், தனிநபர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்திக் கொள்ள, மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும், எஸ்.பி.,க்களுக்கு, ஊர்க்காவல் படை, ஏ.டி.ஜி.பி., முத்துக்கருப்பன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக போலீசாருக்கு உதவுவதற்காக, மாநகர், மாவட்டத்தின் முக்கிய நகரங்களில், ஊர்க்காவல் படை செயல்படுகிறது. தமிழகம் முழுவதும், ஊர்க்காவல் படை வீரர்களின் எண்ணிக்கை, 14, 250 ஆக, இருந்தது, தற்போது,16,145 ஆக, உயர்த்தப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு:
இந்நிலையில், தமிழக போலீசில், 19,866 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பணி மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையில், நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர். இந்தக் குறையை சரி செய்யும் வகையில், தற்போது, 12,208 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. அவர்கள் பயிற்சியை முடித்து பணிக்கு வர, இன்னும் எட்டு மாதம் உள்ளது.ஆனால், இந்த கால கட்டத்துக்குள், பணி ஓய்வு, விருப்ப ஓய்வு, இயற்கை எய்துபவர் என, காலி பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், போலீசில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, 25 ஆயிரத்தை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பற்றாக்குறை அதிகரிப்பு:
இது பற்றிய சுற்றறிக்கை, அனைத்து மாவட்ட எஸ்.பி.,க்கள், மாநகர கமிஷனர், துணை கமிஷனர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து, ஊர்க்காவல் படையில் பணியில் உள்ள வீரர்களில், டிரைவிங் லைசன்ஸ் பெற்றுள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகம் முழுவதும் உள்ள, 16,145 பேரில், 20 சதவீதத்தினர், அதாவது, 3,335 பேர் டிரைவர் லைசன்ஸ் வைத்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இனி, இவர்கள் போலீசின் வாகனங்களை இயக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அரசின் இந்த அறிவிப்பு, ஊர்க்காவல் படை வீரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -
