சிறுமியை பாலியல் கொடுமை செய்த கொடூரன் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்..
சிறுமியை பாலியல் கொடுமை செய்த கொடூரன் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்..
ADDED : ஜூலை 18, 2025 03:31 AM

சென்னை: தனியாக நடந்து சென்ற சிறுமியை துாக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபரை பிடிக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 12ம் தேதி சனிக்கிழமை மதியம் 1:00 மணியளவில், ஆரம்பாக்கத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு செல்ல, ரயில் நிலையத்தை கடந்து மாந்தோப்பு வழியாக நடந்து சென்றார்.
மதிய நேரம் என்பதால், ரயில் நிலையம் அருகே ஆள் நடமாட்டம் இல்லை. அப்போது சிறுமியை, 25 வயதுடைய வாலிபர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அந்த இடத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால், சிறுமியை பலவந்தமாக மாந்தோப்புக்குள் துாக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். சுதாரித்த சிறுமி, வாலிபரின் கண்ணில் மண்ணை துாவி விட்டு தப்பியுள்ளார்.
தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பாட்டியிடமும், உறவினர்களிடமும் சிறுமி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக, ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சிறுமியை அருகில் உள்ள அரசு மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர்.
நடவடிக்கை எடுப்பதில் ஆரம்பாக்கம் போலீசார் காலதாமதம் செய்ததால், சிறுமியின் உறவினர்கள், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., ஜெயஸ்ரீயிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அவரது தலைமையில் விசாரணை நடக்கிறது. சிறுமியிடமும் வாக்குமூலம் பெறப்பட்டு உள்ளது. அப்போது, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர், ஹிந்தியில் பேசியது தெரிய வந்துள்ளது.
மேலும், சம்பவ இடத்தில் உள்ள 'சிசிடிவி' காட்சி பதிவுகளில், சிறுமியை வாலிபர் துாக்கிச் சென்றது பதிவாகி உள்ளது. ஆனால், சம்பவம் நடந்து ஐந்து நாட்களாகியும், காமுகன் பதுங்கி இருக்கும் இடத்தை போலீசாரால் கண்டறிய முடியவில்லை. ஆரம்பாக்கம் மற்றும் ஆந்திர மாநில எல்லைகளில் பதிவாகியுள்ள 'சிசிடிவி' காட்சி பதிவுகளை ஆய்வு செய்த பின்னரும், துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.