உயர் நீதிமன்ற மதுரை கிளையில் போலீஸ்காரர் சுட்டு தற்கொலை: 'என் சாவுக்கு யாரும் காரணமல்ல' என கடிதம்
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் போலீஸ்காரர் சுட்டு தற்கொலை: 'என் சாவுக்கு யாரும் காரணமல்ல' என கடிதம்
ADDED : நவ 27, 2025 11:58 PM

மதுரை: உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம் எழுமலை அருகே இ.கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம், 30, திருமணம் ஆகாதவர். 2023ல் போலீஸ் பணியில் சேர்ந்தார். தற்போது மதுரை ஆறாவது சிறப்பு பட்டாலியன் படையில் பணியாற்றி வந்தார்.
ஆறு மாதங்களாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். சுழற்சி முறையில் நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணிக்கு மெயின் கேட் பணிக்கு வந்தார்.
அதிகாலை 3:30 மணிக்கு, 'எஸ்.எல்.ஆர்.,' துப்பாக்கியால் மார்பு பகுதியில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்த சக போலீசார், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்ற நிலையில் இறந்தார்.
தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில், 'என் சாவுக்கு யாரும் காரணம் அல்ல. நானாக விரும்பி ஏற்றுக்கொள்கிறேன். இதுதொடர்பாக யாரையும் விசாரிக்க வேண்டாம்' என, குறிப்பிட்டிருந்தார்.
முதற்கட்ட விசாரணையில், காதலித்த பெண்ணை திருமணம் செய்வது தொடர்பாக குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு, இருந்தது தெரிந்தது.
மகாலிங்கத்திற்கு வேறு ஒரு பெண்ணை பார்க்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்ததால், மனஅழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்.

