காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலம்: அ.தி.மு.க., குற்றச்சாட்டு
காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலம்: அ.தி.மு.க., குற்றச்சாட்டு
ADDED : ஜன 20, 2025 06:18 AM

சென்னை : 'தமிழகத்தில் பெண் காவலர்களுக்கே, பாதுகாப்பு இல்லாத அவலம் தொடர்கிறது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை: தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை தாண்டி, தற்போது பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலமும் தொடர்கிறது.
நேற்று ஒரே நாளில், சென்னை தாம்பரம் ஆணையரக காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதி களில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் சப் - இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட எட்டு பேர், நகை பறிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
ஒரு பெண் சப் - இன்ஸ்பெக்டர், இரண்டு மளிகைக்கடை மற்றும் உணவகத்தில் இருந்த மகளிர், குழந்தைக்கு உணவு ஊட்டும் தாய், இரு சக்கர வாகனத்தில் பயணித்தோர் என, அனைவரும் தங்களது நகைகளை பறிகொடுத்திருப்பது, ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது.
தமிழகத்தில் காவலர் உட்பட யாரும் பாதுகாப்பாக நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது என்பது, வெட்கக்கேடான நிலை.
இந்த நிலைக்கு காரணமான, நிர்வாக திறனற்ற ஸ்டாலின் அரசு தலைகுனிய வேண்டும்.
நகைப்பறிப்பு போன்ற குற்றங்கள், சர்வ சாதாரணமாக நடக்கும் அளவிற்கு, சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து போனதற்கு, காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், ஸ்டாலின் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
நகை பறிப்பில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் மீது, உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சுய விளம்பரங்களில் செலுத்தும் கவனத்தை, சட்டம் - ஒழுங்கை காப்பதிலும், தி.மு.க., அரசு செலுத்த வேண்டும்.
இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.