ADDED : ஆக 17, 2026 04:10 AM

சென்னை: கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, தமிழக முதல்வர் விஜய் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் விஜய்: கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவில் உள்ள கிராமங்களில் வசித்து வந்த தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர், காவிரி வனவிலங்கு சரணாலய பகுதியில், கர்நாடக வனத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இச்சம்பவம் தொடர்பாக, கர்நாடக வனத்துறை கொடுத்த விளக்கம் ஏற்புடையதல்ல. இக்கொடூர சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து, தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான எல்லா உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை, அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருப்பது அதிர்ச்சி தருகிறது. மனித உயிர்கள் மீது எந்த மதிப்பும் இன்றி நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த கொடூரச் செயல், கடும் கண்டனத்துக்கு உரியது. இச்சம்பவத்தில் தமிழக அரசு, கர்நாடக அரசுக்கு தன் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்.
பா.ம.க., தலைவர் அன்புமணி: இந்த விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். ஆனால், இந்த விசாரணையில் உண்மை வெளிவராது; சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழக செயலர் சண்முகம்: வனப்பகுதிக்குள் காணாமல் போன மாடுகளை தேடிச் சென்ற, தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மூன்று விவசாயிகளை கர்நாடக வனத்துறையினர் சுட்டுக்கொலை செய்திருப்பது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: கர்நாடக வனப்பகுதிக்கு அருகே உள்ள கிராமங்களில், தங்கள் வாழ்வாதாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் தமிழர்களை, சுட்டுக் கொலை செய்யும் அளவிலான அதிகாரத்தை, அம்மாநில வனத்துறைக்கு கொடுத்தது யார்?
இவ்வாறு தலைவர்கள் கூறி உள்ளனர்.
